Tuesday 29 April 2014

கண் பேச்சு..!!

காதல் பேச வேண்டிய
கண்களும்!

கைப்பேசியோடுதான்
பேசுகிறது!

  

வீரனின் பயம்.!!

வீரர்களுக்கும்
ஓர் பயமுள்ளது!

அது
மரணிக்கும்போது
பயந்திட கூடாதே என்பது!

   

எது முக்கியம்...!?

வெல்வோமா..!?
வீழ்வோமா..!?
என்பதல்ல
முக்கியம்!

முயல்கிறோமா..!?
அது தான் முக்கியம்!


Monday 28 April 2014

தோப்பு...!!

சர சரக்குது
தென்னங்கீத்து!

ஏதோ ஒரு மூலயில
பனங்கா விழுற சத்தம்!

தத்தி தத்தி நடக்குது
மைனா கூட்டம்!

வாலால மண்ண தட்டிட்டு
அணில்பிள்ள எடுக்குது
ஓட்டம்!

ஆழக்கெணத்துல சலப் சலப் னு
தண்ணி மோதுது!

பம்பு செட்டு அறயில
கீச் கீச் னு
குருவி குஞ்சுக சத்தம் எழுப்புது!

கெடக்குறேன்!
கயித்து கட்டல்ல நானும்!

பார்வயிக்கு நேரா வானம்!

என்ன சுத்தி
இத்தன சத்தம்!

எஞ்செவியில கேட்குது
ஒரே சத்தம்!

சல சலன்னு
அவ பேசிப்போன வார்த்த!

உரிச்சி எடுக்குது
எம்மனச!

கண்கள மூடிக்கிறேன்!

எச்சில விழுங்குறேன்!

அந்த நெனவு
கொல்லுதா..!?

என்னை தழுவுதா..!?

எனக்கு மட்டுமே தெரியும்!

என்னை தழுவிப்போவும் காத்துக்கும் புரியும்!

     

விவசாயம்!

நன்றிக்கெட்ட
ஜென்மங்கள் நாம்!

சோறு போடும்
விவசாயிகள்
வாழ்விலும் வாயிலும்
மண்ணள்ளி போடுகிறோம்!

     

நல்ல நேரம்!


காலம்
யாருக்காகவும்
நிற்பதில்லை!

நல்ல நேரம்
பார்த்தே
காலத்தை வீணாக்குகிறது
மனித ஜென்மங்கள்!

     

Sunday 27 April 2014

வாப்பா..!


பிள்ளைகள் பலர்
புரட்டி படிக்காத
புத்தகங்கள்!

வாப்பாமார்கள்! (தந்தைமார்கள்)

       

எண்ண ஆச..!{நகைச்சுவை}

அவள்- '
'செல்லம்!உங்க மடியில படுத்துக்கிட்டே நட்சத்திரங்கள,எண்ண ஆசயா இருக்கு..!!

அவன்-
''வேகமா எண்ணு,எம்பொண்டாட்டி வந்துற போறா...!!

       

டாஸ்மாக்! {நகைச்சுவை}



  ''மாப்பு'! பாதி பாட்டில் போயிருச்சி ,!ஒரு மாதிரி வாடையா இருக்குதுல..!!

''கலப்படம் பண்ணிருப்பானுங்க..!!

   {அதே நேரம். சப்ளையர் அலறிக்கொண்டு..}

     ''முதலாளி! கக்கூஸ் கழுவ வாங்கி வச்ச பினாயில காணோம்...!!

       

வார்த்தை!


சொல்லிய வார்த்தைகள்தான்
கொல்லும் என்பதில்லை!

சொல்ல மறுத்த வார்த்தைகளும்தான்
காலமெல்லாம் கொல்கிறது!

        

மனித மனங்கள்...!!

இன்று நான்
நாளை நீ என
சொல்லியே  செல்கிறது 
சடலங்கள்!

ஆயினும்
அறிந்து உணராமல்
தீமைகளில் திளைக்கிறது
மனித மனங்கள்!


        

Saturday 26 April 2014

மனிதனின் நிலை..!!


ஓர் துளியில்
தொடக்கம்!

ஓர் குழியில்
அடக்கம்!

தெரிந்தும்!

இவ்வுலக வாழ்வில்
மயக்கம்!

  

ஓர் நிர்வாகி..!!


எழுத்துப்படைப்பிற்கோ
கலைப்படைப்பிற்கோ
ஓர் படைப்பாளி இருப்பான்!

இத்தனை பெரிய உலகை
நிர்வகிக்க
ஓர் நிர்வாகி இல்லாமலா
இருப்பான்..!.?


    

இயலாதவனா..!?


மறு சுழற்சி முறை (recycle)
முடியும் என்கிறான்
மனிதன்!

மண்ணில் கலந்திட்ட
மனிதர்களை
மீண்டும் உயிர்பிக்க இயலாதவனா.!?
மனிதர்களை படைத்த
இறைவன்!?

உயிர்ப்''பூ''..!!

யாரும்
உயிரின் உருவம் கண்டதில்லை!

ஆனால்
உயிரின் பூக்களை காணலாம்!

நம் வீட்டின் குழந்தைகள்!

     

Friday 25 April 2014

சீதனம்..!!{நகைச்சுவை}

''என்னங்க! மாப்ள வீட்டுக்காரவுங்க சத்தம் போடுறாங்க..!?

   ''அது ஒன்னுமில்லங்க!மாப்ள வீட்ல சீதனமா ஒரு ''டூ வீலர்''கேட்டுருக்காங்க..!பொண்ணு வீட்ல சைக்கிள் வாங்கி கொடுத்துட்டாங்களாம்...!!அதான்....!!

      

Thursday 24 April 2014

நரிகளும்-கன்றுகளும்!

பிரமாதம்,பிரமாதம் என
ஆரவாரம் செய்கிறது
நரிகள் கூட்டம்!

இதனைக்கேட்டு
தத்துகிறது
தாவுகிறது
இளங்கன்றுகள் கூட்டம்!

கைத்தட்டல்கள் அதிர்கிறது!

துள்ளல்கள் தொடர்கிறது!

கன்றுகள் சோர்ந்திட தொடங்குகிறது!

நரிகள் நாக்கில் எச்சில் ஊறுகிறது!

நரிகள் மாறுவதாக இல்லை!

கன்றுகள் உணர்வதாக இல்லை!

        

ஷ்..ஷ்.. முடியல..!!

சமைத்த உணவு
மூடாமலிருந்தால்
சுகாதார கேடு என்கிறார்கள்!

''சமைந்த''வர்கள்
திறந்துக்கொண்டலைவது
நாகரீகம் என்கிறார்கள்!

{சமைந்தவர்கள்-இரு பாலரும் தான்}

     

Wednesday 23 April 2014

முகப்பரு..!!

யாரோ பார்ப்பதால்
யாரையோ பார்ப்பதால்
ஊர் சொல்லுது!

ஹார்மோன் மாற்றம்
அறிவியல் சொல்லுது!

எனக்கோ
பருவை
கருவாக்கி
கவிதை வருகிறது!

   

முன் பணம் ...!!

முன்பணம் கட்டி விட்டு
மானப்பங்கம் நடத்தும்
''மன்மத குஞ்சுகள்'' போல்!

வரும் நாளில் கொள்ளையடிக்க
இந்நாளில் ஓட்டிற்கு
பணம் வினியோகிக்கிறார்கள்
நாளை கொள்ளையர்கள்!

     

உலக புத்தக தினம்! {23 ஏப்ரல்}

தனக்கு முன்னிருப்பதை
பிரதிபலிக்கும்
கண்ணாடியைப்போல்!

தனக்குள்ளடங்கிய உயிரை
வெளியேற்றிடும்
கருவறையைப்போல்!

எண்ணங்கள்
வார்த்தைகளாக
வெளிப்படுவதைப்போல்!

கடுமையாக
 முகத்தை வைத்துக்கொண்டாலும்
கண்ணீராய் கசிந்திடும்
காதலைப்போல்!

கடந்த காலத்தை
தன்னுள் புதைத்து
மற்றவர்களுக்கு உணர்த்துகிறது
புத்தகங்கள்!

பக்கங்களை புரட்டினால்
மனங்களில் துளிர்கிறது
சிந்தனைத்துளிகள்!

புத்தகங்கள்
வாழ்ந்து சென்றவர்களின்
வரலாறு!

வாசிப்பவர்கள்
நாளைய வரலாறு!

வாசிப்போம்!
வாசிப்பையும் நேசிப்போம்!

     




Tuesday 22 April 2014

நானே..!!

பார்த்தாள்!
சிரித்தாள்!

பார்க்கப்பட்டேன்!
சிதைக்கப்பட்டேன்!

  

வைரம்!

வைரங்களை வாங்கிட
வக்கற்றவன் நான்!

என்னவளே!
புன்னகைத்திடு
பார்த்துக்கொள்கிறேன்!

      

வாழ்வின் ருசி..!!

ருசிகர உணவு
 சமைப்பவர்களின் வாழ்வு!

பெரும்பாலும் ருசிப்பதில்லை!

       

Monday 21 April 2014

கருவாச்சியோட சில நாட்கள்!

கருவாச்சி கைய பிடிச்சேன்!
காடு கரயெல்லாம் போய் வந்தேன்!

பேருதான் கருவாச்சி!
மனசு தங்கமா மின்னுச்சி!

கட்டுனவனால கருமாயம்!*
கஞ்சிக்கும் கருமாயம்*!

சாவைத்தொட்டு பெத்தெடுத்தா
மவன் ஒன்னு!

பேரு வச்சா அழகு சிங்கம்னு!

அவன் அழகு சிங்கமில்ல
அழுக்கு சிங்கம்!

கருவாச்சியோட கண்ணீரு
என் கண்ணிலும் ஊறியது!

ஒதுங்கினேன்!

முடியாமல்
மீண்டும் தொடங்கினேன்!

அவ உணர்வை
நானுணர்ந்தேன்!

பொறந்த மண்ணை நேசிப்பதால்
இப்படியென அறிந்தேன்!

பாதகத்தி போன பாதையெல்லாம்
பட்ட தீட்டுன கத்தி!

அவ பட்ட கஷ்டம்!
அவ அடஞ்ச அனுபவம்!

எந்நெஞ்ச வருடுச்சி!
சிந்தன வெதைகள வெதச்சிச்சி!

வைர முத்து அவுக ஒழப்பானது!
ஒவ்வொரு பக்கமும் சொன்னது!

நீங்க படிச்சி பாருங்க!

இங்கே இருந்தே
 இன்னொரு ஊருக்கு
போய் வருவீங்க!

(வைரமுத்து அவர்களது எழுத்துப்படைப்பான கருவாச்சி காவியத்தால் வந்த எழுத்துக்கள்தான் அது)
     

Sunday 20 April 2014

காலத்தின் பேனா...!! {1200 வது பதிவு}


பாறையிடுக்கினுள்
பறவைகளின் எச்சங்களின் வழியாக
விதைபடும் விதைகளைப்போல்!

விலாசம் தேடியலைகையில்
விலாசத்திற்கு வழிக்காட்டும்
விரல்களைப்போல்!

குருதி தேவைப்படும்போது
ஓடி வந்து உதவிடும் முகமறியா உறவுகளைப்போல்!

எங்கு தொடங்கி
எங்கு சேர்ந்தது என அறிய முடியாத
வட்டத்தைப்போல்!

நானும்
என் எழுத்தும்!

எழுத்தை நோக்கி
நான் நடந்தேனா..!?

என்னை நோக்கி
எழுத்து வந்தனவா..!?

அறிய முனையவில்லை!

காரணம்
காலம் தன்னை பதிந்துக்கொள்ள
பேனாக்களை தன் வசமாக்கியுள்ளது!

அப்பேனாக்களில்
என் பேனாவும் இருக்கனும்
எனும் ஆவலில்
எண்ணங்கள் எழுத்தாகிறது!

   

நாய்கள் ஜாக்கிரதை...!!{நகைச்சுவை}

{இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்}

    ''என்னடா..!? பக்கத்து வீட்டு ''ஜான்சி''ய சுத்தற போல..!?

      {வெட்கத்துடன்}    ''ஆமான்டா..! உனக்கு யார்டா சொன்னா...!?

      ''இல்ல !இப்ப வரும்போதுதான்  பார்த்தேன் ,அவுக வீட்ல ''நாய்கள் ஜாக்கிரதை''னு போர்டு மாட்டிருந்துச்சி...!!

         

எப்படி தெரியும்..!!? {நகைச்சுவை}


{இரு  நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்}

    ''டேய் மாப்ள! நேத்து தினேஷ் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தே போல..!!''

    ''ஆமான்டா..!!செம கூட்டம்ல ,ஆமா, நான் உன்னை பாக்கலயே,உனக்கு எப்படி தெரியும்..!?

    ''ம்ம்...!!கல்யாண வீட்ல காணாமல் போன  
என் செருப்பைத்தான் இப்ப நீ !போட்டுருக்கே...!!!

       

Saturday 19 April 2014

சுடு சோறு..!!

சூடான சோற்றை
பிணைந்து பிணைந்து
சூட்டைக்குறைத்து
குழந்தை வாயில் திணித்திடும்
தாயைப்போல!

'பட்டதை' எழுதிட
 எண்ணுகையில்
யாரையேனும் சுட்டிடுமோ எனும்
தயக்கத்தினால்
தட்டி தட்டி வார்த்தைகளை
செதுக்குகிறேன்!



மலர் வனம்!

மனதிற்குப்பிடித்த மலர்வனத்தையும்
மறைந்து நின்றே பார்க்கிறேன்!

அருகினில் சென்றால் என் 'வாட்டம்''!

அவ்வனத்தையே ''வாட''செய்திடக்கூடாதே
என்பதற்காக!

பக்கத்து வீட்டுக்காரர்..!! {நகைச்சுவை}

மனைவி- 
''ஏங்க!பக்கத்து வீட்டுக்காரரு,அவரு பொண்டாட்டிக்கு எவ்வளவு நகை வாங்கி கொடுத்துருக்காரு தெரியுமா...!?''

கணவன்-
''ஆமாம்! இத மட்டும் சொல்லு!அந்தாளு ரெண்டு பொண்டாட்டிய ''டைவர்ஸ்''பண்ணிட்டு மூனாவதா கல்யாணம் முடிச்சத மட்டும் சொல்ல மாட்டே...!!

     

இணையமெனும் கடலில்..!!

செய்தியொன்றை எழுதி
குடுவைக்குள் அடைத்து
கடலில் வீசும்
யாருமற்ற தீவில் சிக்கிய
ஒருவனைப்போல்!

நானும் எண்ணங்களை எழுதி
''இணையமெனும்''கடலில் அனுப்புகிறேன்!

சேர வேண்டியவர்களிடம் சேர்ந்திடும் என்ற
நம்பிக்கையில்!

உருவங்களை பார்க்காதே!


பாறைக்குள்ளும்
நீரூற்று உள்ளது!

நீர்வீழ்ச்சியினுள்ளும்
பாறைகள் உள்ளது!

   

நட்பு..!


விழும்போதெல்லாம்
கை  கொடுப்பவன் மட்டும்
நண்பனில்லை!

''தவறும்''போதும்
கைக்கொண்டு தடுப்பவனும் 
நண்பனே!

    

பிஞ்சு விரல்கள்!


எரிந்துக்கொண்டிருக்கும்
சிமிழி விளக்கு!

அதை தொட்டிட ஆசை
பிஞ்சு விரல்களுக்கு!

தொட முனைகிறது!

அனுபவ கைகள் தடுக்கிறது!

பிஞ்சு விரல்கள்
அனுபவ கையை வெறுக்கிறது!

காலம் கடக்கிறது!

பிஞ்சு விரல்கள்
பருத்த கைகளானது!

சிமிழி விளக்கு எரியும்போது தொட்டால்
சுடும் என அறிகிறது!

தடுத்த கைகளை நன்றியோடு தேடியது!
நேற்றைய பிஞ்சு விரல்கள்!

காண முடியாத தூரம் போய்விட்டது அனுபவ கைகள்!

     

வலி..!!

எனக்கு காயங்கள் தந்தவர்களை
காலம் என் முன் நிறுத்துகிறது!

காயப்படுத்திட கூடிய
வாய்ப்புகளுண்டு!

கவலைபட வேண்டாம்!

நான் காயப்படுத்த மாட்டேன்!

அவ்வலியின் ரணத்தை உணர்ந்துள்ளதால்!

     

Friday 18 April 2014

பேஸ் புக்..!!{நகைச்சுவை}


(தன் நண்பனைப்பார்த்து மற்றொருவர்)

''டேய். !இங்கே பாரு! ஒருத்தன் வீடு தீப்பிடிக்குதுன்னு ''ஸ்டேட்டஸ்''போட்டுருக்கான்.அதை முன்னூத்தி பத்து பேர் ''லைக்'' பண்ணிருக்கானுங்க..!!

       .

பாதகத்தி!


மெல்ல மாவையெடுத்து!

அதன்மேல் எண்ணெய் கொடுத்து!

நோகாமல் ஓரங்களையழுத்தி!

மேலும் கீழுமாய் விரல்களை செலுத்தி!

விசிறுகிறேன்!

''சரட், சரட்,என ஓசையை உணர்கிறேன்!

அவ்வோசைக்காக வீசிறினேன்!

விசிறும்போதெல்லாம் அவ்வோசையை கேட்டேன்!

கிழிந்தது!
விசிறிய மாவும்!

அதனை முதலாளி கண்டதால்
சீட்டும்! (வேலை)

அச்சப்தத்தில் எனக்கென்ன கேடு!.

அச்சப்தத்தில் என்னவளின் பட்டுச்சேலை சப்தமாக எண்ணி தொடர்ந்தேன் அதனோடு!

பாதகத்தி!
வாழ்க்கையின் ஓட்டத்தைதான் மாற்றினாள்!

இப்ப பிழைப்பையும் கெடுத்து விட்டாள்!

Thursday 17 April 2014

மௌனிக்கிறேன்..!!

என் முன் வைக்கப்படும்
கேள்விகளுக்கு!

நான் மௌனிக்கிறேன்!

பதிலொன்றும் இல்லாமல் இல்லை!

எதிராளி நொருங்கிட கூடாதே என்பதற்காக!

மலைக்கிறேன்..!!

அழகே!
நீ கவிதையொன்று கேட்கையில்
நானும்,என் பேனாவும்
மலைத்தோம்!

ஆம்!
கவிதையே ஒரு கவிதை கேட்டதால்..!!

    

Wednesday 16 April 2014

கிரிக்கெட்!

என் தேசத்தில்தான்
விளையாட்டு 
வாழ்க்கையாகவும்!

வாழ்க்கை 
பொழுதுபோக்காகவும்
பார்க்கபடுகிறது!

வாழப்படுகிறது!

   

Tuesday 15 April 2014

அலைந்தேனடி...!!

என்னவளே!
உன்னை காண அலைந்த
தூரத்தை விட!

உன்னை எழுத்திட
வார்த்தை தேடி
அலைந்த தூரம் அதிகம்!

 

ஏமாற்றம்..!!

ஏமாறுவது
அறிவீனத்தால் அல்ல!

ஒருவர் மீது கொண்ட
அதீத பாசத்தால்!

Monday 14 April 2014

சூதாட்டம்!

சின்ன மீனை போட்டு
பெரிய மீனை பிடிப்பதாக
சொல்லபடுகிறது!

இல்லை!

சூதாட்டமென்பது
கழுத்தில் கயிற்றை மாட்டி
ஊஞ்சலாடுவது!

   

Sunday 13 April 2014

பொருப்பாளி..!

என்னை 
நானே
முழுமையாக படிக்கவில்லை!

என்னை யாரும்
தவறாக படித்தால்
நான் பொருப்பாளியில்லை!

   

Saturday 12 April 2014

கிளி ஜோசியம்!

உழைக்க
நீயே முயலாதபோது!

கிளி எடுத்துக்கொடுக்கும்
ஒரு சீட்டுக்குள்ளா.!?
உன் வாழ்க்கை சிறக்க போகிறது!?
      

Friday 11 April 2014

மின்னல்கள்!

மின்னல்கள் 
என்னைக்கண்டு
வெட்டுகிறது!

ஓ!
மின்னல்களே!
தெரிந்துக்கொள்ளுங்கள்!

நான்
வெண்ணிலவையே வேண்டாமென
ஒதுக்கியவன்!

ஒதுங்கியவன்!
 

கருப்பு பூக்கள்!

இப்பூவுலகில்
கருப்பு பூக்கள்
பூப்பதில்லை!

அப்பூக்களெல்லாம்
பூவையர்களாக
பிறக்கின்றன.!

விந்தையான மனிதர்கள்!

பணம் தேடி
தூக்கம் தொலைப்பவர்கள்!

பணம் சேர்ந்ததால்
தூக்கத்தை தொலைத்தவர்கள்!

Thursday 10 April 2014

தனிக்குடித்தனம்!

அன்று 
உறவுமுறைகளை
அப்பா (தாத்தா),ஆச்சா(பாட்டி)
சொல்லி வளர்த்தார்கள்
பேரபிள்ளைகளுக்கு!

இன்று
அப்பாவும்,ஆச்சாவும்
அறிமுகம் செய்யபடுகிறார்கள்
பேரபிள்ளைகளுக்கு!

என்ன உலகம்டா..!?

வரதட்சணை வாங்குபவனை
''ஆம்பிள்ளையா..!!? என கேட்குது!

வரதட்சணை வேண்டாமென்பவனை
''ஆம்பிள்ளைதானா..!?!.என 
சந்தேகம் கொள்ளுது!

கணக்கு!

வாழ்க்கையென்பது
வரவு செலவு கணக்கல்ல!

பாசத்தை  தெரிவிப்பவருக்கே
திருப்பி கொடுப்பதற்கு!

Wednesday 9 April 2014

கண்கள் இருக்கா..!!?{நகைச்சுவை}

மனைவி-''ஏங்க! காதலுக்கு கண்கள் இல்லையினு சொல்றாங்களே!
உண்மையா..!.?

கணவன்- ''ஆமாம்! உண்மைதான்!

மனைவி-எப்படி சொல்றீங்க..!?

கணவன்-''காதலிச்ச உன்னையே கல்யாணம் 
முடிச்சிருக்கேனே!அதிலிருந்தே தெரியல...!!?

     

புலி!

புலி பசித்தால்
புல்லை தின்னாதுதான்!

ஆனால்
புள்ளிமானின் மீது காதல் வந்தால்
நுனி புல்லாக தேடி தின்னும்!

விவாகரத்து ..!

பூக்கள் தொடுத்த நாரை
அறுப்பதற்கு முன்
நன்றாக சிந்தியுங்கள்!

நறுமணங்கொண்ட மலர்கள்
அசிங்களில் விழவும்
கால்களில் மிதிபடவும்
வாய்ப்புள்ளது!

Tuesday 8 April 2014

புரியவில்லை...!!

ஆயிரங்களுக்கு உடன்படுபவளை
விபச்சாரி என்பதும்!

லட்சங்களுக்கு ஒத்துக்கொள்பவனை
கல்யாண மாப்பிள்ளை என்பதும்!

காயம்..!!

காயம்படாத உள்ளங்கள்
இவ்வுலகில் இல்லை!

காலப்போக்கில்
ஆறாத காயங்களுமில்லை!

Monday 7 April 2014

முகம் தேடி...!!

அன்று கூட்டத்தினூடே 
உன் முகம் தேடி அலைந்தவன்!

இன்றோ!
நீ என் முகம் காணாவண்ணம் 
கூட்டத்தினுள் கரைகிறேன்!

திட்டு!

திட்டுபவர்கள்!
என்னை திட்டிக்கொள்ளுங்கள்!

உங்களுக்கு தெரியுமா.!?
நீங்கள் என்னை செதுக்குகிறீர்கள்!

ஆடை!



அங்கங்களை மறைக்க-
அன்றைக்கு நெய்யப்பட்ட ஆடை!

அங்கங்கே அங்கங்களை காட்டவே-
இன்றைக்கு தைக்கபடுகிறது ஆடை!

Sunday 6 April 2014

மலேசிய விமானம்!

உலோகப்பறவையே!
எல்லோரும் பார்க்க -
நீ!
பறந்தாய்!

யாருமே பார்க்க முடியா வண்ணம்-
எங்கே நீ!?
மறைந்தாய்!?

உனக்குள் இருந்த உயிர்கள்!

உலகில் எத்தனை பேர்களுக்கு உறவுகள்!?

நீ!
காணாமல் போனதை நினைத்தாலோ!
கண்களோரம் கண்ணீர் துளிகள்!

உன்னால் ஒன்றுமட்டும் புலப்பட்டது!

மனிதர்கள் அனைவரும்-
ஓர் ஆண்,பெண்ணிலிருந்து வந்தவர்கள் என்பது!

முட்கள்!


பூக்களை தேடியே 
எனது பயணம்!

ஆனாலும்
முட்கள் குத்தாமல் விடுவதில்லை!

கிழி..!!


எழுதி இவன் ''கிழிச்சான்''-என
சொல்பவர்களுமுண்டு!

பாவம்!
அவர்களுக்கு தெரியாது!
நான் கிழிப்பட்டதை எழுதுகிறேன் என்று!

கைதி!

மனைவி , மக்களோடு 
வாழ அனுமதிப்பெற்ற கைதி!

வீட்டோட மாப்பிள்ளை!

புரோட்டாக்காரன் கவிதைகள் !!


ஓர் இனம்!
நானும் !
புரோட்டாவும்!

அடிபட்டாலும்!

சுவை தருகிறோம்!

----------------

புரோட்டா!
என்னை சுடுவதும்-
நான் தொடுவதும்-
ஓர் தொடர்கதை!

ஆதலால்தானோ!?-
சுடும் வார்த்தைகளும்-
என்னை துவளச்செய்வதில்லை!?

-----------------

புரோட்டாவே!
நீயோ!
எண்ணெய் ஊற்றாவிட்டால் ''கருப்படிக்கிறாய்''!

என்னவளோ!
என்னைக்கண்டாலே கடுப்பாகிறாள்!

-----------------------

திரியில்லாத மெழுகுவர்த்திகள்-
நாங்கள்!

உறவுகள் ஒளி பெற-
நெருப்போடு உறவாடுபவர்கள்!

-----------------------
''விசிற''முடியுமா.!?
இடையில் கிழிந்திடுமா.!?
தொட்டவுடன்
சொல்லிவிடும்
புரோட்டா மாவு!

வாழ்வில் வசந்தமா.!.?
வாழ்வை முடிக்கும் விஷமா.!?
அர்த்தம் தர மறுக்கிறது
வஞ்சியவளின் சிரிப்பு!

மூனாவது தெரு சரசு..! (நகைச்சுவை )


(நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டார்கள்)

''டேய்  மாப்ள!அந்த மூனாவது தெரு சரசு என்னை பார்த்தவுடனே சிரிச்சிக்கிறாடா...!!

''அது ஒன்னுமில்லடா..!அந்த பொண்ணு ''ப்ளு கிராஸ்''அமைப்புல இருக்கு.அதனால நாய்களை கூட இரக்கமாத்தான் பார்க்குது...!!

நகைச்சுவை துணுக்குகள் !

(டி.வி பார்த்துக்கொண்டிருந்த இரு நண்பர்கள் )

"இந்த சீரியல்ல ரெம்ப ஓவரா போறானுங்க..!!

''ஏன்!? என்னாச்சி...!?

இல்லடா..அந்த பொண்ணு கர்ப்பமாகி ஒன்றை வருசமாகுது..இன்னும் ''டெலிவிரிக்கு''கூட்டி போகாம இருக்கானுங்க...!!
-----------------------

(டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் கணவனை பார்த்து மனைவி)

''ஏங்க! ஒரு சேனலை வைக்க வேண்டியதுதானே..!ஏன் மாத்திக்கிட்டே இருக்கீங்க..!?

'்இந்த வீட்ல நான் சொல்றத ''ரிமோட்''மட்டும்தான்டி கேட்குது! இதுகூட உனக்கு பிடிக்கலயா...!?
-----------------------

Saturday 5 April 2014

பிறந்த மண் !(44)

1930 இரண்டாம் உலக யுத்தம்!

உலகெங்கும் ஒப்பாரி அவலம்!

உலக யுத்தத்திற்கு வித்திட்டவர்கள்!
ஹிட்லரும்!
முசோலினியும்!

இவ்விருவர் கைகள் ஓங்க நாடுகளை விழுங்கினர்!

நேச நாடுகள் அவர்களது கைகளை அடக்கினர்!

ஹிட்லர் தற்கொலை செய்துக்கொண்டான்!

நேச நாடுகளால் முசோலினி தூக்கிலிடப்பட்டான்!

ஒரு வாரமாக அனாதையாக தொங்கியது சடலம்!

பின்னர் பிணங்களோடு பிணமாக புதைக்கப்பட்டது முசோலினி சடலம்!

அதனைத்தொடர்ந்து லிபியா நேச நாடுகள் வசம்!

கழிந்தது சில கால கட்டம்!

பிறகு விடுதலையானது!

சுதந்திர காற்றை சுவாசித்தது!

உமருக்கும்,முசோலினிக்கும் கிடைத்ததென்னவோ தூக்குதான்!

உயர்ந்த மரியாதை யாருக்கு..!?

ஒருவன் வாழ்ந்த காலம் சிறப்பானதா..!?

விடை சொல்லிடும் இறந்திடும் காலம்!

உமர் போராடியது மண்ணை மீட்க!

முசோலினி துடித்தது பிறர் மண்ணை ஆக்கிரமிக்க!

இருவரின் வரலாறும் உலகம் படிக்கிறது!

இன்றைய அநீதியாளர்கள் ''பாடம்''படித்துக்கொண்டால் நல்லது!

-----------முற்றும்---------
எனது இந்த வரலாற்றுப்பயணத்தில் உந்துதலாக கருத்துக்களிட்டு என்னை உற்சாகமூட்டியவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பெருமக்கள்;-

1.சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!
http://dindiguldhanabalan.blogspot.com/?m=1

2.சகோதரி கிரேஸ் அவர்கள்!
http://thaenmaduratamil.blogspot.sg/?m=1

3.சகோதரர் சுரேஷ் அவர்கள்!
http://thalirssb.blogspot.sg/2014/02/mokka-jokes-2.html?m=1

4.சகோதரர் நாகராஜ் அவர்கள்!
http://venkatnagaraj.blogspot.sg/?m=1

இப்பெருமக்களுக்கும்.படித்து விட்டு கருத்திடாமல் சென்ற உறவுகளுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Friday 4 April 2014

பிறந்த பூமி !(43)

மேகங்கள் ஒன்று சேர்ந்தது-
''சோ''வென கொட்டியது மழை!

குளிர குளிர குளிக்கச்செய்தது-
''ஓ''வென அழுத மக்களை!

மழை விடாமல் பெய்தது!
நீதிபதிகளையும்,மருத்துவர்களையும் ஒதுங்க செய்தது!

மழை ஓய்ந்தது!
தொங்கிய சடலம் இறக்கப்பட்டது!

சடலத்தை பார்த்து சிலையானார்கள்!
நீதிபதியும்!
மருத்துவரும்!

தூக்கிலிட்டால்-
கண்களும்,நாக்கும்-
வெளியே தள்ளியிருக்கும்!

இப்படி எதுவும் இல்லாதது-
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கு!

எப்போது இவர் இறந்தார்!?

இறந்த பிறகா இவர் தொங்கினார்!?

மாறி மாறி கேள்வி கேட்டுக்கொண்டனர்!
விடை தெரியாமல் திகைத்தனர்!

முடிவுக்கு வந்தனர்!

பெரிய கதவை திறந்துவிட சொல்லினர்!

பாதுகாப்பான வழியில் அவர்கள் சென்றுவிட்டனர்!

திறக்கப்பட்ட கதவின் வழியே மக்கள் நுழைந்தனர்!

கண்ணீரால் மறுபடியும் குளித்தனர்!

அல்கரீமி கூட்டத்திலிருந்தார்!

முக்தார் அலியும் கதறிக்கொண்டிருந்தார்!

பிரேதம் தூக்கப்பட்டது!

சுமந்துக்கொண்டு கூட்டம் கிளம்பியது!

நேசித்த மண்ணின் மீதும்,மக்கள் மீதும்-
மிதந்து சென்றார்!
உமர் முக்தார்!

சமுத்திரத்தில் கலந்திட்ட மழைத்துளியை கண்டறிய இயலாது!

லட்சியவாதிகள் சிந்தும் ரத்தங்கள்,கோழைகளையும் வீறு கொண்டு எழச்செய்யாமல் விடாது!

ஒரு உமர் முக்தார் சுவாசிப்பதை  நிறுத்தினார்!

ஒரு தேசத்தையே பிறந்த மண்ணை நேசிக்க வைத்திட்டார்!

(தொடரும்....!!)

Thursday 3 April 2014

பிறந்த பூமி !(42)

போராளிகளால் பொறுக்க முடியவில்லை!
தண்டனையை தடுக்க வழியுமில்லை!

வெளியிலுள்ள போராளிகள் நகரத்திற்குள் நுழைய முடியாத கெடுபிடிகள்!
போராளிகள் நெஞ்சமெங்கும் கோபக்கணைகள்!

வழமையாக காலை 5-55 தூக்கிலிடும் நேரம்!
போராளிகள் பள்ளிவாசல்களுக்கு தகவல் அனுப்பினார்கள் அந்நேரம்!

''நகாராக்கள்'' முழங்கியது!
மக்களை எழுப்பியது!

தூக்கிலிடும் செய்தி!
தூக்கத்தை தொலைக்கச்செய்த செய்தி!

மக்கள் அனைவரும் சிறைச்சாலை நோக்கி சென்றனர்!
இறைவனை துதித்தே பயணித்தனர்!

''அஷ்ஹது அ(ன்)லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹூ! லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹி!''

அவ்வாசகம்!

மக்கள் உயிரிலிருந்து ஒலித்த திருவாசகம்!

அதே வேளை!
சிறைச்சாலை!

தூங்கிய உமர் எழுப்பப்பட்டார்!

உமர் படபடப்பின்றி எழுந்தார்!

பாதிரியார் ஒருவர் !
''கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக..!!என்றார்!

உமர் முக்தார் சொன்னார்!

''கொஞ்ச நேரமே இருக்கிறது!
குளிப்பதற்கு தண்ணீர் தேவைபடுகிறது!

வெள்ளை துணி ஆறு கஜம் ''கபன்''அடையாக்க வேண்டியுள்ளது!

இதுதான் நான் கேட்டுக்கொள்வது!''

ஏற்பாடு செய்யப்பட்டது!

குளித்த உமர் தொழுதார்!

''கபன்''ஆடையை அணிந்தார்!

கையில் குர்ஆனுடனும்,நெஞ்சில் ஈமானுடனும் தூக்கு மேடைக்கு சென்றார்!

தூக்கு மேடை நெருங்க நெருங்க!

மக்கள் ''இறைவனை துதிப்பது'' உமரின் காதில் ஒலிக்க!

மேடையில் ஏறினார்!

மக்கள் குழுமி இருந்தததை கண்டார்!

அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!! எனும்
முழக்கம்!

எதிரொலித்தது!
எக்குத்திக்கும்!

அருகிலிருந்த நீதிபதி தூக்கிலிடும் காரணங்களை படித்தார்!
பழைய பல்லவியை பாடினார்!

கடைசியாக சொல்ல ஏதும் உள்ளதா..!?என கேட்டார்!

உமர் சொன்னார்!

'' குர்ஆனை ஓத அனுமதியுங்கள்!
பிரார்த்தித்து கையை இறக்கும்வரை பொறுத்திருங்கள்!

அதனைத்தொடர்ந்து ''காரியத்தை''முடித்திடுங்கள்!
எனது உடலை மக்களிடம் ஒப்படைத்திடுங்கள்!

முசோலினி அவர்களை சந்திப்பீர்களேயானால்!
அவரிடம் சொல்லுங்கள்!

அவருக்கு தூக்கு சம்பவம் நடக்காமல் இருக்க பிரார்த்திக்க சொல்லுங்கள்!

நான் மனநிறைவுடன் மரணத்தை தழுவினேன் என சொல்லிடுங்கள்!

என் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்!
சுதந்திரம் அடையாமல் விடமாட்டார்கள்!என
சொன்னார்!

மூக்கு கண்ணாடிஅணிந்து குர்ஆனை ஓதினார்!

ஒரு கையில் குர்ஆனை பிடித்துக்கொண்டார்!

மறு கையை தூக்கி பிரார்த்தித்தார்!
கையை இறக்கினார்!

காலின் கீழிருந்த பலகைகள் பிரிந்தது!
கழுத்திலிருந்த கயிறு இறுக்கியது!

''இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்''

இறைவனிடமிருந்தே வருகிறோம்!
இறைவனிடமே மீள்கிறோம்!

(தொடரும்...!!)

//குறிப்பு;
நகரா-பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கு முன் அடிக்கபடும் முரசு.

ஈமான்-இறை நம்பிக்கை.

கபன்-முஸ்லிம்களுக்கு இறுதி ஆடையாக அணிவிக்கபடும் வெள்ளை துணி.//


Wednesday 2 April 2014

பிறந்த பூமி !(41)

அலி மாறுவேடம் பூண்டார்!

தானே களத்தில் குதித்தார்!

''சந்தித்த நண்பர்கள்''சிலர் கைது!

சிலர் தலைமறைவு!

முசோலினியின் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது!

கூட்டம் குவிந்தது!

அதிலொரு தலையாக அலி தலையும் இருந்தது!

முசோலினியை பேச குரலொன்று அழைத்தது!

அதிபர் முசோலினி வந்தார்!

அதிரும்படி முழங்கினார்!

''பல ஆண்டுகாலமாக சதித்திட்டம் தீட்டினார்கள்!

நம் மக்களாட்சியை முடக்க நினைத்தார்கள்!

உளவு படை உஷார்ப்படுத்தப்பட்டது!

அதன் நடவடிக்கையால் நேற்றிரவு சிலரை கைது செய்ய முடிந்தது!

சிலர் தப்பித்து விட்டனர்!

அதில் முக்கிய தளபதி கிராசியானி ஒருவர்!

தேசத்துரோகம் செய்துவிட்டார்!

லிபியாவில் உமர் முக்தாரை கொல்லாமல்,விசாரணையெனும் நாடகமாடினார்!

நீதிபதிகளை வர வைத்து கொன்று விட்டார்!

சதித்திட்டம் தீட்டி ,இப்போது தப்பித்து விட்டார்!

''என்ன செய்யலாம் கிராசியானியை...!?-என
முசோலினி கூட்டத்தை நோக்கி கேட்டார்!

''தூக்கில் போடனும் கிராசியானியை...!!-என
மக்கள் கொந்தளித்ததில் முசோலினி மனம் குளிர்ந்தார்!

கிராசியானி கூட்டத்தை விட்டு நழுவினார்!

நாட்டை விட்டு தப்பிக்க வழி தேடினார்!

இரண்டு டிவிஷன் இராணுவம் ,லிபியா செல்லவிருந்தது!

கப்பல் தயாரானது!

ராணுவத்தினருக்கு சமையல்காரர்களை நியமிக்கும் முகவர்கள்!

அலியை யாரென்று தெரியாமல்,சமையல்காரர் என அனுமதித்து விட்டார்கள்!

அலி ,தன் நண்பர்களை வைத்து தப்பிக்க  
 ஏற்பாடு செய்தார்!

வெற்றியும் கண்டார்!

இத்தாலிய அரசு வெறி கொண்டு கிராசியானியை தேடியது!

கப்பலோ அலியை ,அமைதியாக சுமந்து சென்றது!

லிபிய துறைமுகம் வந்தது!

கப்பல் தனக்குள் வைத்திருந்தவர்களை  வெளியேற்றியது!

அலியின் மனமோ வீட்டிற்கு செல்ல வேண்டாமென எச்சரித்தது!

கால்கள் பெரிய பள்ளிவாசலை நோக்கி நடந்தது!

இமாமை சந்தித்தார்!

அலி பேசினார்!

ஹுசைன் வரவழைக்கப்பட்டார்!

அலி குடும்ப பாதுகாப்பை கூறினார்!

அல்கரீமியை சந்திக்க ஏற்பாடானது!

அலியை கண்டதும்,கரீமியின் மனம் திகைத்தது!

''நீங்களா..!?
எப்படி தப்பித்தீர்கள்!.

உங்களை சுட்டுவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்''!-என ஆச்சரியமும் சந்தோசமும் கலந்தவராக-
கரீமி கேட்டார்!

அலி,அல்கரீமி,மற்றும் சகாக்கள் ஆலோசனை செய்தார்கள்!

''உமர் அவர்களை சிறையுடைத்து மீட்க வேண்டும்''! என்றார் ஒருவர்!

''இல்லை!
வேண்டாம்!
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது''-
என்றார் மற்றொருவர்!

''கொரில்லாத்தாக்குதல் மூலம் சிதறடிக்க வேண்டும்''-என்றார் மற்றொருவர்!

அலி எழுந்தார்!

''முசோலினி துணிந்து விட்டான்!

ஆதலால்தான் மேலும் படைகளை அனுப்பி   உள்ளான்!

நாம் தாக்குதல் நடத்தினோமானால் ,ராணுவத்தினர் மக்களை கொன்று குவித்திடுவார்கள்!

அதன் சந்தர்ப்பத்தைதான் அவர்கள்  எதிர்பார்க்கிறார்கள்!''

அலி சொல்லிக்கொண்டிருந்தார்!

போராளி குழு உளவாளி வந்தார்!

படபடப்புடன் கூறினார்!

''தூக்கு மேடை சுத்தம் செய்யப்படுகிறது!

விளக்குகள் கூடுதலாக மாட்டப்படுகிறது!

முஸ்லிம் நீதிபதிகள் இருவரை கைது செய்துள்ளனர்!

மருத்துவர்கள் இருவரை அழைத்துச்சென்றுள்ளனர்!

கைதியை தூக்கிலிடும் யூத இன ''சுமிட்ஜ்'' ஐ
 கூட்டிப்போயுள்ளனர்!

(தொடரும்....!!)


Tuesday 1 April 2014

பிறந்த பூமி !(40)

உமரை, அலி சந்தித்தார்!

நீதிபதிகள் கொலையானதை சொன்னார்!

இத்தாலிக்கு செல்வதை சொன்னார்!

உமர் தொடர்ந்தார்!

''அல்கரீமி வன்முறையை கையிலெடுப்பவர்!

உங்கள் ''கதை''முடிக்கவும் துணிந்தவர்!

அதனால்தான் ஹசன் வேலைக்காரரைப்போல் நடித்து ,
உங்களை பாதுகாத்தார்!

இல்லையென்றால்,இன்று நீங்கள் முஸ்லிமாக இருக்கமாட்டீர்!

எனது தண்டனையை குறைக்க வேண்டும் என்பதில் ,எனக்கு விருப்பமில்லை!

உங்களது விருப்பத்தில் தலையிடவும் விருப்பமில்லை!

போய் ,வர எனது வாழ்த்துக்கள்!-என
பேசி முடித்தார்!
உமர் முக்தார்!

உமரின் கைகளில் முத்தமிட்டு, அலி கிளம்பினார்!

விமானம் புறப்பட்டது!

சடலங்களையும்,சில உயிர்களையும் சுமந்து சென்றது!

இத்தாலியில் செய்தி பரப்பபட்டிருந்தது!

உமர் முக்தார் மீது ,பத்திரிக்கைகள், பழிகள் பல சுமத்தி இருந்தது!

விமான நிலையத்தில் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை!

மக்கள் கோபம் வார்த்தைகளில் தெறிக்காமல் இல்லை!

விமானம் தரை இறங்கியது!

சடலங்களும் இறங்கியது!

மக்கள் கோஷமிட்டனர்!

''உமர் முக்தாரை கைது செய்த கிராசியானி  வாழ்க!

திறமையற்ற ஆட்சி செய்த லிபிய புதிய கவர்னர் ''எக்ஸிமினி'' ஒழிக!

கூட்டம் கதறியது!

முக்கியஸ்தர்களை சுமந்துக்கொண்டு வாகனங்கள் பறந்தது!

ராணுவ முகாம் அறையில் அலி தங்கினார்!

நண்பர்களை சந்திக்க தொடர்பு கொண்டார்!

அவர்களெல்லாம் முசோலினியின்
 ஆட்சியமைய உதவியவர்கள்!

கிராசியானி அழைப்பை ஏற்று வந்தார்கள்!

கிராசியானி அவர்களிடம் விளக்கினார்!

லிபிய நிலவரங்கள்!

நடக்கும் போராட்டங்கள்!

இத்தாலியர்களின் இழப்புகள்!

இப்படியாக தொடர்ந்து சொன்னார்!

இதற்கு நாளை முசோலினியை சந்திக்கனும்!

நண்பர்கள் நாமெல்லாம் பேச்சுவார்த்தையின் பலனை எடுத்துச்சொல்லனும் ,என்றார்!

சம்மதம் தெரிவித்தனர் நண்பர்கள்!

கலைந்தார்கள்!

அலி ரகசியமாக தொழுதார்!

நள்ளிரவின்போது  கதவு தட்டும் சப்தம் கேட்டு எழுந்தார்!

கதவை திறந்தார்!

வெளியில் துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர்!

''தேசத்துரோகம் செய்ததால் உங்களை கைது செய்கிறோம்''- என்றார் தலைமைதாங்கி வந்தவர்!

''எனது ஆடையை மாற்றிக்கொள்ளலாமா..!?-
அலி கேட்டார்!

'தலைமைத்தாங்கி' சம்மதித்தார்!

அறைக்குள் சென்றார்!

நேரம் கடந்தது!

கதவு திறக்காதிருந்தது!

சந்தேகப்பட்டு ராணுவத்தினர் முன்கதவை திறந்தனர்!

அலி அங்கே இல்லாதிருந்தார்!

பின் கதவை திறந்தனர்!

அங்கு இருட்டான திறந்த வெளி தோட்டத்தை கண்டனர்!

சினம் கொண்டு தேடினர்!

கிடைக்காததால் வெளியேறி தேடலானார்கள்!

தோட்டத்தின் இருளில் ஓரிடத்தில்தான் அலி ஒளிந்திருந்தார்!

ராணுவ விடுதி பழக்கப்பட்ட இடமானதால் இலகுவாக தப்பித்தார்!

இரவு நேர கேளிக்கை விடுதி முடியும்வரை காத்திருந்தார்!

பிறகு அக்கூட்டத்தில் கலந்து தப்பித்தார்!

நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலமானார்!

விடிந்தது!

பத்திரிக்கை வந்தது!

அலி பத்திரிக்கையை எடுத்தார்!

தலைப்புச்செய்தி தன்னை பற்றியதானதை படித்தார்!

அதில் செய்தி இப்படி வெளியாகி இருந்தது!

''தேசத்துரோகி கிராசியானி!
அவரை உயிருடன் பிடிக்க ,அல்லது சுட்டுக்கொல்ல'' -அரசு உத்தரவு!

(தொடரும்...!!)