யாருமில்லையென்றாலும்
தெரு விளக்கு எரிந்துக் கொண்டுதான்
இருக்கிறது..!
வறுமையாய் வந்தாய்
உழைப்பாயானாய்.!
வியர்வையாய் வந்தாய்
ஊதியமானாய்.!
கண்ணீராய் வந்தாய்
புன்னகையானாய்.!
வெறுப்பாய் வந்தாய்
விருப்பமாயானாய்.!
அறியாமையாய் வந்தாய்
அறிவானாய்.!
கல்லாய் வந்தாய்
சிற்பமானாய்.!
பசியாய் வந்தாய்
தேடலானாய்.!
காயமாய் வந்தாய்
கவிதையானாய்.!
சோகமென்ன
சுகமென்ன
வாழ்வென்ன
தாழ்வென்ன
பிறப்பென்ன
இறப்பென்ன
இருளென்ன
ஒளியென்ன
மொழியென்ன
மௌனமென்ன
எல்லாவற்றிலும்
இறைவா நீயே.!
எனது
கண்ணீரையும்
கவலைகளையும்
சுமைகளையும்
பொறுப்புகளையும்
இறைவா.!
உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்
எனது சிறகுகளை விரிக்கிறேன்.!
அது சரியில்ல
இது சரியில்ல
எதுவும் சரியில்ல என
பிதற்றிக் கொண்டே இருக்கிறான்
தன்னை இன்னும் கண்ணாடியில்
பார்க்காதவன்.!
மௌனத்தினுள்
என்னைத் தேடிக் கொண்டிருப்பதெல்லாம்
ஏதோவொரு கணத்தில்
என்னை கண்டடைந்து விடுவேனென்ற
நம்பிக்கையில்தான்..!