Friday 31 July 2015

கவிதையே..!!(56-60)


56)
நாமிருவர் எழுதிய
காதல் "கவிதையே"!

இன்று
குழந்தையாக உயிர்ப்பெற்று சிரிக்கிறது
நம் கைகளிலே!
------------------------------
கவிதையே..!!(57)
------------------
நீ
திட்டத் திட்ட 
நான் கவிதை சொல்வேன்!

ஏனெனில்
எனக்கு இன்னும் திகட்டவில்லை
"கவிதையே"!
------------------------------
கவிதையே..!!(58)
-------------------
கண்ணை மூடி தூங்கென்று
என்னைச் சொல்பவர்களுக்குத் தெரியாது!

நான் கண்களை மூடிக் கொண்டும்
உன்னைத் தேடுவேன் என்பது!
--------------------------------
கவிதையே..!!(59)
------------------
காலம் கடந்து
தாய்மை அடைந்தவளின்
மன நிலைதான் எனக்கும்!

நான் காதல் கவிதை 
எழுதிடும்போதெல்லாம்!
-----------------------------
கவிதையே..!!(60)
----------------
என்னை விட்டு 
நீ பிரிந்துப் போனாலும்!

சிரிப்புடனேயேப் போ
கவிப்பூவே !

வேண்டுமென்றால்
உனக்கும் சேர்த்து 
நான் அழுதுக் கொள்கிறேன்!
------------------------------

Monday 27 July 2015

கவிதையே..!!(51-55)

51)
காதல் கொண்டவர்களெல்லாம்
உன்னை எழுதுவார்களெனத் தெரியவில்லை !

ஆனால்
உன்னை எழுதுபவர்களெல்லாம்
ஏதோ ஒன்றின்மேல் 
காதல் கொண்டவர்கள்தான்!

//ஏதோ ஒன்று என்பதினை நீதியின் மீதோ,சமூகத்தின் மீதோ,எதிர்பாலினத்தின் மீதோ,.....இப்படியாக பொருள் கொள்க//
-------------------------------------
கவிதையே..!!(52)
------------------
உன்னைத் தேடி ஓடுவதில்
நான் "இளைக்கிறேன்"எனும்
ரகசியம்!

என் "கிறக்கத்தை"க் கேட்பவர்களுக்குத்
தெரிவதில்லை!
----------------------------------
கவிதையே..!!(53)
------------------
கொஞ்சம் நாளாய்
என்னைக் காணவில்லையென்றாய் 
தேடினாய் !

உனது வேர்களைத் தேடித்தான்
கொஞ்சத்தூரம் போய் வந்தேன்
கவிதையே!
-------------------------------
கவிதையே..!!(54)
--------------------
என்னவளின் கண் மை டப்பாவை
கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டு
வந்துச் சொல்!

நான்
காதல் காவியமொன்று
எழுதிட வேண்டும்.!
-----------------------------
கவிதையே..!!(55)
--------------------
நான் 
கண்ணீர்த்துளியாய் விழுகையில்
உள்ளங்கையால் தாங்கிடாதவர்கள்!

இப்பொழுது தேடுகிறார்கள்!

கவிக்கடல் உன்னில்
நான் கலந்திட்டது தெரியாமல் !
---------------------------------

Friday 24 July 2015

எச்சில்கள் !

உன் முத்தத்தின் எச்சில்கள்!

என் உயிர்ப்பூவில் படிந்திருக்கும்
பனித்துளிகள்!

         

Wednesday 22 July 2015

காதல்.!

கட்டில் ஆடும் 
காலத்தை விட!

கை கால் ஆடும்
காலமே உணர்த்துகிறது !

உண்மைக்காதல் எதுவென்று..!!?

      

Saturday 18 July 2015

மருதாணி !

என்னைப்போல தான்
மருதாணியும்!

உன்னை
அழகுப்படுத்த!

தன்னையே அர்ப்பணித்து விட்டது!

    

Friday 17 July 2015

இந்திய அரசியல்!

ஆட்சி கட்டில்தனை 
அலங்கரிக்க சந்தனங்கள் மறுத்ததால்!

சாக்கடைகள் அதிலேறிக்கொண்டு
சந்தனங்களையும் ஆள்கிறது!

            

Monday 13 July 2015

முகமூடி..!!

காந்தியின் 
"கணக்கை"முடித்தவர்கள்!

காமராசரை
"கருக்கிட"த் துடித்தவர்கள்!

வருகிறார்கள் !

தன் கொலைகார 
கோரப்பற்களை மறைத்துக்கொண்டு!

"தேசப்பக்தன்" என்ற முகமூடியை அணிந்துக்கொண்டு!

      


Thursday 9 July 2015

இரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்!


நம்மிருவர் சிறகிலும் இருவேறு ஓவியங்கள்!

அவ்வோவியத்தை நாமே கண்டிட முடியாததில்தான் இயற்கை வைத்திருக்கிறது ஓர் ரகசியம்!

என்மேலுள்ள ஓவிய அழகினை நீ சொல்ல!

உன்மேலுள்ள ஓவிய அற்புதத்தை நான் சொல்ல !

நாமிருவரும் 
சொல்ல ,சொல்ல!

சொல்ல,சொல்ல!

மெல்ல ,மெல்ல!

மெல்ல.மெல்ல!

நம் மனக்குடுவையில் நிரம்பிய வழிகிறது
ஓர் காதல்ரசம்!

மழைக்காலத்தில் ஏழைக்குடிசையில் ஒழுகிடும் மழைநீர்
 பாத்திரத்தை நிரப்பி வழிவதைப் போல்!

Monday 6 July 2015

சிப்பியைப் போல.!? (1600வது பதிவு)

வான்தரும் 
ஓர் மழைத்துளிக்காக
வாய்ப் பிளந்து காத்திருக்கும்
சிப்பியைப் போலவா..!?

நீ தந்த
ஓர் முத்தத்தைப் பெறவா !?
மண்ணில் நான் பிறந்து வந்தேன் !?

       

Saturday 4 July 2015

காதல் பந்து !

என் காதலை
கால்பந்தாய் எட்டி உதைத்தவளே!

கொஞ்சம் பொறு!

சுவற்றில் பட்ட 
அப்பந்து திரும்பி வருகிறது!

உன்மேல்
கவிதைப்பூக்களாய் கொட்டிட..!!

    

Friday 3 July 2015

நெருங்கிடுவதற்கு முன்..!!

என்னிடம் 
நெருங்கி வருவதற்கு முன்
ஒதுங்கி வாழவும்
ஒத்திகைப் பார்த்துக்கொள்!

ஏனென்றால்
பிரியமானவர்களுடன் சேர்ந்து வாழும்
அதிர்ஷ்டம் இல்லாதவன்
நான்!

      

Thursday 2 July 2015

என்னை மன்னித்து விடுங்கள் !

நான் வாசித்திடாத கவிதைகளே!

நான் ரசித்திடாத விடியற்காலைப் பொழுதுகளே !

நான் எழுதிடாத என்னுள் எழுந்த சிந்தனைகளே !

நான் நடந்திடாத கடற்கரைச்சாலையே!

நான் ஒதுங்கிடாத பனைமர நிழலே!

நான் கலந்திடாத நீதிக்கானப் போராட்டங்களே!

நான் பேசிடாத பால்யகால நட்புகளே!

நான் தெரிந்துக்கொள்ளாத என் மேல் நேசங்கொண்ட இதயங்களே!

உங்களைப் பிரிந்து ஓடும்
என்னை மன்னித்து விடுங்கள் !

மீசை அரும்புவதற்கு முன்னால் உழைக்க 
ஓடினேன்!

இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்!

அன்று
என் முன்னிருந்த கடமைகளுக்காக!

இன்று
என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் கடமைகளுக்காக !

உழைப்பதில் 
எனக்கு கலக்கமில்லை!
தயக்கமில்லை!

ஆனால்
உங்களைப் பிரிந்தேன் என எண்ணுகையில்தான்!

வார்த்தை வசப்படுவதற்கு முன்
பேனா எழுதுவதற்கு முன்!

என் கண்கள் எழுதி விடுகிறது!
கண்ணீரால் கவிதையொன்றை.....!!