Wednesday 30 September 2015

சண்டியர்.!! (சிறுகதை ) (1)



       இரவு பத்தரை மணிப்போல்,சலீமின்
கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை எடுத்து காதுக்குள் வைத்தான் சலீம்.

"ஹலோ..."

எதிர் முனையில் அமீர்....

"என்னண்ணே...!அதுக்குள்ளத் தூங்கிட்டியா ...!? பக்கத்து ஊர்ல ஒரு வம்பாயிருச்சி..கொஞ்சம் வா ,போயிட்டு வந்துருவோம்....

"டேய்...இன்னேரமா....!? என சலீம் கேட்டதும்.

"வேணும்னா ,காலையில சாப்பிட்டுட்டு போவோமா..!?எனக் எரிச்சலுடன் கேட்டான் அமீர்.

"ஷ்...ஷ்ஷ்.....சரி,ரோட்ல நில்லு வாரேன்..."என சொன்னவன்,சலிப்புடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வெளியில் நின்ற பல்சரை எழுப்ப ,சாவியை விட்டுத் திருகினான்,நான்கு தெருவைத் தாண்டிச் சென்றதும்,மெயின் ரோடு வந்தது.அங்கு ஐந்து,ஆறு வாலிபர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.இவன் பல்சரைப் பார்த்ததும்,உட்கார்ந்து இருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.உடனே எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து,"ஷேர் ஆட்டோவில்"செல்வதற்கு.பல்சரை விட்டு இறங்கியவன் கேட்டான்.

"என்னடா பிரச்சனையாம்....!?

கூட்டத்திலிருந்த அமீர் சொன்னான்,

"என்னனு சரியாத் தெரியல...."தண்ணி"யப் போட்டுட்டு பிரச்சனைப் பண்ணிருக்கான் ,மீராசா..
அவனைப் புடிச்சி வச்சிருக்கானுங்களாம்...."

"அதுக்கு நாமப் போயி பிரச்சனைப் பெருசாப் போன,நம்மள திட்டித் தீர்ந்துவாங்க..நம்ம ஊர்ல ..பெரிய ஆளு யாரையாவதுக் கூட்டிட்டுப் போவோமே...."

சலீம் சொன்னதற்கு கூட்டத்திலிருந்த இன்னொருவன் சொன்னான்..

"டேய்...பெரிய ஆளைக் கூட்டிப் போன ஊர் ஃபுல்லா தெரிஞ்சிரும்டா..நாம போயி "கமுக்கமா" பேசி,மீராசாவை கூட்டி வந்துருவோம்..."

"நீ சொல்றது சரிதான்..நாம மட்டும் போயி ,"அடிச்சிக்கிட்டா" ,அதுக்கும் நம்ம "தலய " உருட்டுவாங்களே...."

பேசிக்கிட்டு இருக்கும்போதே அமீர் போன் அடித்தது.போனில் எடுத்துப் பேசுவதற்கு முன்னால் சொன்னான்.

"கொஞ்சம் இருங்கப்பா .."அங்கே" இருந்துதான் ,போன் பண்ணுறானுங்க.."எனச் சொல்லிக் கொண்டே கைப்பேசி அழைப்பை ஏற்றான்.எதிர்முனையில் இருந்தவன் கத்திப் பேசியது ,அங்கே நின்ற எல்லோருக்குமே கேட்டது .

"ஏய்...என்னப்பா ..வேகமா வந்து,"அவனைக்" கூட்டிட்டுப் போங்க...."னு பதற்றத்துடன் சொல்லி விட்டு,போனை அணைத்து விட்டான்.

"சரி சரி ! வா கெளம்புவோம்..! என்று நின்ற அனைவரும்,ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர்.கொஞ்ச நேர பயணம்தான்,அவ்வூருக்கு வெளிப்புறத்தில் கடற்கரை செல்லும் வழியில் வளைந்து ஆட்டோ சென்றது.கொஞ்சத் தூரத்தில் "சார்ஜ் லைட்"வெளிச்சம் ஆட்டோவின் மேல் விழுந்தது. .அப்போது ஆட்டோவில் வந்தவர்கள்.வண்டியை செம்மண் சாலையில் நிறுத்தி விட்டு,இறங்கி நடந்தார்.லைட் வெளிச்சம் வந்த திசையை நோக்கி.அப்போது அமீர் சலீமிடம் கேட்டான்.

"அண்ணே..அவனுங்க எத்தனப் பேரு இருக்கானுகனு தெரியல..நாம அஞ்சாறுப் பேருதான் இருக்கோம்...என்ன செய்ய...!?"

அதற்கு சலீம் சொன்னான்....

"இல்ல !கொஞ்சப் பேருதான் இருப்பானுங்க...எல்லாப் பயலுவளும் தூங்கிருப்பானுவடா...."

இப்படியாக பேசிக்கொண்டே நடந்து,அவ்விடத்தை நெருங்கினார்கள்.பனைக் காட்டுக்குள்
தூரத்திலிருந்து பார்க்கையில் ,மூன்று அல்லது நான்கு பேர்கள் இருப்பதாகத்
தெரிந்தது.அருகில் வந்ததும் தான் சலீமிற்கு "பகீர்"என்று ஆனது.மீராசாவை பிடித்து வைத்திருப்பது ,ஐம்பது பேருக்கு மேலே இருந்தார்கள் .


             அங்கங்கே கொஞ்சம் ,கொஞ்சம் கூட்டமாக களைந்து நின்றுகொண்டிருந்தார்கள். சலீமையும்,அமீரையும் பார்த்ததும் ,அக்கூட்டத்தில் சிலர் கொஞ்சம் மரியாதையாகப் பேசினர்.

     "அண்ணே! மீராசா எப்ப பார்த்தாலும் ,எங்க பசங்கள கண்டபடிப் பேசுறான்.இவனை நாங்க அடிச்சா ,ஊர் சண்டைய இழுத்து விடுறானுங்க.."என ஆதங்கத்தோட சொன்னான் ஒருத்தன்.

    "சரி....!"இப்ப அவனை எங்கே....!?என சலீம் கேட்டான்.

"வாங்க"என முன்னாடிச் சென்றவனை பின் தொடர்ந்தார்கள்.கொஞ்சத் தூரத்தில் மீராசா நின்றான்.சுற்றி நான்கு பேர் நின்றார்கள்.நல்ல அடி விழுந்திருக்கும் போல, மீராசாவிற்கு.முகத்தில் இடம் விட்டு,இடம் "சதைப் போட்டு"இருந்தது.மீராசாவிடம் அமீர் கேட்டான்.

"என்னடா நடந்துச்சி....!?ஏன் பிரச்சனையாச்சி...!? டேய் வாயத் தொற ...!?என அமீர் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லாத மீராசாவை,சலீம் அடிக்க ஆரம்பித்தான் ,திட்டிக் கொண்டே.அப்போதும் மீராசா ஒன்றும் சொல்வதாக இல்லை.சலீம் அடித்ததைப் பார்த்து,பிடித்து வைத்திருந்தவர்கள்.கொஞ்சம் விரைப்பாக இருந்ததைக் குறைத்தார்கள்.சரி காலையில் பேசிக் கொள்வோம் என கிளம்புகையில்.பிடித்து வைத்தவர்களில் ஒருத்தன் சொன்னான்.

"இனிமே ,ஒழுங்கா அவனை இருக்கச் சொல்லுங்க..இல்லனா ,அடிபட்டுதான் சாவான்...."

"டேய் !"பொத்துங்கடா " என்ன ஒன் ஊரு னு சவுண்டு குடுக்குறீயோ..!?அவன் தப்பு பண்ணுனா ,எங்கள்ட சொல்லு,அத விட்டுட்டு ,என்ன .....க்கு அடிச்சீங்க..."சலீமுடன் வந்தவன் வார்த்தையை வீச,ஆரம்பித்தது வாக்கு வாதம்.அப்புறம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாறி மாறி அடி விழுந்தது. இரவு நேரம் என்பதால்,சண்டைச் சத்தம் ஊரை எழுப்பி,இந்த இடத்துக்கு வர வைத்து விட்டது.பெரியவர்கள் வந்து ,சண்டையை ஒடுக்கினார்கள்.

"எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்"னு சலீமுடன் மீராசாவை அனுப்பி வைத்தார்கள்.சலீமிற்கும்,கூட வந்தவர்களுக்கும் சட்டைக் கிழிந்து இருந்தது."சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு"னு வடிவேலு வசனம் பேச தான் ,அந்த இடத்தில் யாரும் தயாராக இல்லை.

       மீராசாவுடன் ஆட்டோ கிளம்பியது . அப்போதுதான் மீராசா வாயைத் திறந்தான்.நடந்ததைச் சொன்னான்.

"மூனு மாசத்துக்கு முன்னால, நரிப்பையூர்ல ,வாலிபால் மேட்ச்ல நம்ம ஊர் டீம் தோத்ததுக்கு,"அவனுங்க"நக்கல் பண்ணுறானுங்கள்ள,அதுக்கு "வாங்கி கட்டினானு"ங்கள்ள,அத மனசுல வச்சிகிட்டு இருந்துருக்கானுங்க...அது தெரியாம நான் அவனுங்க "சரக்கடிக்க "கூப்பிட்டதும்,போயிட்டேம்பா...போன எடத்துல ,என்னய அடிச்சிட்டு,நான்
தப்பா பேசினேன்னு சொல்லிட்டானுங்க... "............." என சொல்லி முடிச்சான் மீராசா.

அதற்கு சலீம் கடுப்பாகி மீராசா முகத்தில் அறைந்து விட்டு கேட்டான்.

".........."அங்கேயே சொல்ல வேண்டியதுதானே ..!?இங்க வந்து சொல்லுறே..."

"எண்ணே !சும்மா ,சும்மா கை நீட்ற வேலை வச்சுக்காதே..அங்கே சொன்னால்,பிரச்சனை பெருசாகும் னு சொல்லல" என்றான் மீராசா.

அங்கே அடிபட்டதுக்கும்,மீராசா நடந்ததை சொன்னதுக்கும்,அடிபட்ட இடத்தில் மிளகாய்ப் பொடி தடவியது போல்,இருந்தது அத்தனைப்பேருக்கும்.

"விடியட்டும் அப்போ இருக்கு அவனுங்களுக்கு...." என ஆத்திரமானார்கள்.ஆட்டோ ஊருக்கு வந்து விட்டது. அவன் ,அவன் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.சலீம் மட்டும் ரோட்டில் இறங்கி ,தன் பல்சரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றான்.

பொழுது விடிய போகிறது.....


           நேற்று இரவு நடந்த சம்பவம்.விடிவதற்குள் ஊரெல்லாம் பரவி விட்டது.காலை ஏழரை மணிப்போல மீராசாவை அடித்ததில் ஒருத்தன், ஆட்டோ சவாரி வர மீராசா கூட்டாளிகள் அவனை அடித்து விட்டார்கள்.சில பெரியவர்கள் சண்டையை ஒடுக்கி ,அப்பையனை அனுப்பி விட்டார்.இங்கிருந்து ,தன் தம்பியை பள்ளிக்கூடத்திற்கு விட போன ஒருவனை அவர்கள் அடித்துவிட்டார்கள்.இப்படி மாறி,மாறி அடி,அடி,அடி.

          ஊரில் உள்ள பெண்கள் ,"பேதியில போவானுவோ"இப்படி அடிச்சிக்கிட்டு சாவுரானுங்களே"னு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.இரண்டு ஊரிலும் பெரியவர்கள்,அடக்கினார்கள் சண்டைப் போடுபவர்களை,கேட்பதாக இல்லை .அதோடு "அடிபட்டவர்கள்",காவல் நிலையத்தில்
மாறி,மாறி புகார் அளித்தார்கள் .இரண்டு ஊரிலும் உள்ள பெரியவர்களை ,காவல் நிலையத்திற்கு அழைத்து, ஒன்றாக உட்கார வைத்துப் பேசினார்.இன்ஸ்பெக்டர் முருகன்.

"இந்தா பாருங்க,ரெண்டு பக்கமும் ,பெட்டிசன் கொடுத்துருக்காங்க,நீங்க ரெண்டு ஊருமே,சம்பந்தம் கலக்கி இருக்கீங்க ,தாயா,புள்ளயா இருக்குறீங்க,அப்படி இருக்கையில "சல்லி பயலுவ"இவனுங்கள ,ஒடுக்கி வைங்க.ரெண்டு நாள் டைம் அதுக்குள்ள ,நீங்க சமாதானமா போயிட்டா நல்லது,அப்படி இல்லனா,நாங்க எஃப் ஐ ஆர் போட்டு ,"செய்ய" வேண்டியதை செஞ்சிக்கிறோம்"என மிரட்டலாக சொல்லி அனுப்பினார் இன்ஸ்பெக்டர் .

      இரு ஊர் பெரியவர்கள் சேர்ந்து சம்பந்தபட்டவர்களை மட்டும் ,அழைத்துப் பேசினார்கள் .அப்போதும் சண்டையிட்டவர்கள்,முறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.அப்போது பழுத்த வயதான சம்சு அப்பா எழுந்துப் பேசினார்.

     "டேய் மாப்ளைங்களா..!!ஏண்டா இப்படி அடம்புடிக்கிறீங்க.,ஒங்க அக்காமார்கள,தங்கச்சிமார்கள அங்கேயும்,இங்கேயும் கட்டிக் கொடுத்து இருக்கீங்க, உங்களுக்கு நேரம் போகலைனா,அடிச்சிக்கிறீங்க.அப்புறம் பந்து வெளயாட்டுல ஒண்ணா சேர்ந்துக்கிறீங்க,இப்படிதானே நீங்களுவ பண்ணுறது.!?சரி இளந்தாரி பயலுவ "அப்படி ,இப்படி"இருப்பானுவ னு பெரிய மனுசனுங்க நாங்களும் பொறுமையா போறோம்.இல்லயினா ரெண்டு ஊரு "படுவா பயலுவ"ளயும்,உரிச்சி தொங்கப் போட்ருவோம்.,என்ன சொல்லுறீக.!?அப்பா நான் நல்லதுதான் சொல்லுறேன்.இல்லயினா சொல்லுங்க,போலிஸ் கேஸ் னு நீங்கதான் அலையப்போறீங்க..."என பேசி முடித்தார்.

              அதன் பிறகு பெரும் அமைதி ஏற்பட்டது.யாரும் எதிர்த்துப் பேசுவதாக இல்லை.இதுதான் சந்தர்ப்பம் என்று ,பெரியவர்கள் முடிவை சொன்னார்கள்.அடிபட்டவர்களின் மருத்துவச் செலவிற்கு,அடித்தவர்கள் பணம் கொடுத்து விட வேண்டும்,காவல் நிலையத்தில் கொடுத்த மனுக்களை திரும்ப பெற வேண்டும்.அடிக்கடி சண்டைக்கு காரணமான இரண்டு ஊர் இளைஞர்களுக்கும் அபராதம் போட்டார்கள்.அப்புறம் சண்டைப் போட்டவர்களை கைக்குலுக்கி கொள்ளச் சொன்னார்கள்.சுமூகமாக முடிந்தது இரு ஊரு பிரச்சனையும்,ஆனாலும் காமம் தீர்ந்த பின்னும் மிச்சமிருக்கும் காதலைப் போல்.முடிந்து விட்ட சண்டையிலும் ,இன்னும் ஒரு சண்டை மிச்சம் இருந்தது.

ஆமாம்.அந்த சம்பவத்தின்போது ஊரில் இல்லாமல்,ஒரு வாரம் சுற்றுலா சென்றிருந்த அஜீஸ் கோபத்தில் வந்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு என்ன கோபம் என்றால்,அவன் சாச்சி(சின்னம்மா) மகன் மீராசாவை,சலீம் எப்படி அடிக்கலாம் என்கிற கோபம்.

அஜீஸ் கோபக்காரன் என கூட்டாளிக்குள் ஒரு பேச்சு இருந்தது .அப்படியென்றால் சலீம் மட்டும் சாந்த சொரூபியா..!?

     (தொடரும்....)

      

Sunday 27 September 2015

கவிதையே..!! (96-100)


96)
உன்னை 
தாய்ப்பாலாய்க் குடித்துதான்!

பசியமர்த்திக் கொள்கிறது
என் உணர்வுக் குழந்தை!
----------------------------
கவிதையே..!! (97)
-------------------
உன்னை 
வாசித்தலிலும்,நேசித்தலிலுமே
ஊதுபத்தியாய் கரைந்து மணம் வீசுகிறது !

என் ஓய்வு நேரங்கள்!
--------------------------
கவிதையே..!! (98)
---------------------
உன்னைத் தொடர்ந்து
எழுதும் நான்!

சில நாட்கள் 
உன்னை எழுதாமலும் இருக்கிறேன்!

ஏனென்றால் 
உன்னை எழுதிடச் சொல்லி 
நீ செய்யும் சித்திரவதைகளும்
எனக்குப் பிடித்திருப்பதால்!
---------------------------
கவிதையே..!! (99)
--------------------
என் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் 
சோகத்தைப் புரிந்தவர்களால் மட்டுமே!

என் கவிதைக்குள்ளிருக்கும்
"கரு"வினை உணர முடியும்!
-------------------------------
கவிதையே..!! (100)
----------------------
என் கண்களைப் 
படிக்கத் தெரிந்த உன்னிடத்தில்!

என் காதலை மறைக்கத் தெரியாமல்
தோற்றுத் தான் போகிறேன் !
--------------------------------

Friday 25 September 2015

கவிதையே..!! (91-95)


உன்னால் ஏற்படும் 
சுகத்தையும்!

உன்னால் ஏற்படும்
ரணத்தையும்!

என்னால் மட்டுமே 
உணர முடியும்!

"கவிதையே"!
----------------------
கவிதையே..!! (92)
----------/---------
உனது நினைவெனும் சமுத்திரத்தில்
மிதந்திடும் காகித கப்பல் நான்!
----------------------------------
கவிதையே..!! (93)
------------------
நீ எனக்கு
குளிரும் கண்ணீர்த்துளி!

சுடும் பனித்துளி!
---------------------------
கவிதையே..!! (94
--------------------
என் கைப்பேசியும் 
கவிதைப் பேசுவது!

உன்னுடன் பேசுகையில்தான்
"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!! (95)
---------------------
புகைப்படத்தினில் 
நான் அழகாய்த் தெரிவதெல்லாம்!

உன் நினைவினில் திளைப்பதால்தான்!
----------------------------------------


Sunday 20 September 2015

முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)


      இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.

        அதேவேளையில் நாம் ஒன்றினை நினைவு கொள்ள வேண்டும்.சந்தேகப்பட்ட அந்த ஆசிரியருக்கும்,அஹமதுவிற்கும் ,ஏதேனும் முன் பின் பகைகள் இருந்தனவா ??இல்லையே..! பிறகு ஏன் அவ்வாசிரியருக்கு அவ்வாறான எண்ணம் வர வேண்டும்,அவ்வெண்ணத்தை விதைத்தது எது.!? காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே...?அந்தச் சிறுவன் மீதும் சந்தேகப் பார்வை விழச் செய்தது.எந்தவொரு இஸ்லாமிய அடையாளமான ,தாடியோ ,தொப்பியோ இல்லாத இந்தச் சிறுவனுக்கே இந்தக் கதியென்றால்,இஸ்லாமிய அடையாளங்களோடு வாழுபவர்கள்,எதிர்கொள்ளும் சங்கடங்கள் ,சந்தேகப்பார்வைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை,பொய்ப்பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்,பரபரப்புச் செய்தி என வெளியிட்டு வயிறு வளர்ப்பவர்களும் சிந்தித்திட வேண்டும்.திருந்திட வேண்டும்.

       அப்படியென்றால் இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் இல்லையா!? என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த "கெட்டவை"களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை."அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல" குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா !?இல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளா!? எனவும்,தனிப்பட்ட  சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா !? என செய்தி வெளியிடுபவர்கள் சிந்தித்து செய்திகளை வெளியிடுங்கள்.அப்பாவிகளை குற்றவாளிகளாக்க உங்களது பேனா மையை பயன்படுத்தாதீர்கள் .செய்திகளை வெளியிடுவதற்கு முன் உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால் ,அதனையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் .

     

Thursday 17 September 2015

கவிதையே..!!(86-90)

நீ திரும்பிப் பார்க்காத
என் முகத்தை!

இனி
புகைப்படத்திற்குக் கூட 
திரும்பிக் காட்டுவதாக இல்லை!
----------------------------------
கவிதையே..!!(87)
-------------------
உன்னைக் கரம் பிடித்தது
என் வாழ்வினை அர்த்தமாக்கிடத்தான்!

ஆனால் நீயோ
அற்புதமாக்கி விட்டாய்!
----------------------------
கவிதையே..!!(88)
------------------
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தப் பிறகு தான்!

என்னையும் கொஞ்சம்
நேசிக்க ஆரம்பித்தேன்!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!! (89)
------------------
உன்னை எழுதிவிட்டு 
அழிக்கிறேன்!

பிறகு
அழித்ததையேத் திரும்ப
எழுதுகிறேன் !

ஆச்சரியக்குறி
கேள்விக்குறியிட்டு 
உன்னை அழகும்படுத்துகிறேன்!

சிறிது நேரத்தில் 
அக்குறிகளை அழித்து தொடர்ப்புள்ளி இடுகிறேன்!

இப்படியாக 
உன்னைக் கொடுமைப்படுத்திடும்
என்னைப் பார்த்து!

எப்படிதான் சிரிக்கிறாயோ !?
ஓர் குழந்தையைப்போல !
----------------------------
கவிதையே..!! (90)
-------------------
நீ எனக்கு
விட்ட கதையா !?
தொட்ட கதையா !? தெரியவில்லை !

ஆனாலும் 
என் வாழ்வின் 
விடுகதை நீ !
------------------------

Wednesday 16 September 2015

ஆயிஷா..! (சிறுகதை)


       ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி விட்டதால்,இராமநாதபுரம் "மதார்ஷா" ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.அந்த கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு ஆசிப் வெளியேறினான் .தன் மனைவி ஆயிசாவுடன்.ஆசிப்பிற்கு முப்பத்தி மூன்று வயதுதான் .கொஞ்சம் உடம்பு பருத்து வயதைக் கூட்டிக் காட்டும்,பார்க்க அழகாகதான் இருப்பான்.கொஞ்சம் தொந்தியைக் குறைக்க நினைச்சி,நினைச்சே "டையர்ட்"ஆகிப் போனவன்.அவன் மனைவி நல்ல களையாக இருப்பாள்.அவனுக்கு ஏற்ற ஜோடிதான்.இருவரும் வாங்கிய சாமான்களை கம்பு பைக்குள் வைத்துக் கொண்டு,தான் வந்த "விக்டா"வை நோக்கிச் சென்றார்கள் .

          அங்கே "விக்டா"பக்கத்திலிருந்த,ஒரு கல் மேலே உட்கார்ந்துக் கொண்டு டிரைவர் காதர்.கோல்ட் ப்ளாக் இழுத்துக்கொண்டு இருந்தான்."புண் பட்ட நெஞ்சைப் புகையை விட்டு ஆத்துடா"னு கூட இருந்த கூட்டாளி சொல்லி,"இழுக்க"ஆரம்பிச்சவன்,இப்போது "இழுத்து,இழுத்து" நெஞ்செல்லாம் புண்ணாக எரியுதென்று  மருந்து வாங்கி சாப்பிடுகிறான்.ஆனால் சிகரெட்டை விட முடியலை னு சொல்லிக்கொண்டே சிகரெட் பிடிப்பான்.தூரத்தில் ஆசிப் வருவதைப் பார்த்ததும் ,மிச்சமிருந்த சிகரெட்டை,இரண்டு "இழுப்பில்"காலி செய்து விட்டு,காலால் சிகரெட்டை அணைத்து விட்டு ,ஆசிப்பை நோக்கிச் சென்றான்.

        வண்டியின், பின்னால்,வாங்கியதை திணித்து விட்டு, மூவரும் ஏறி அமர "விக்டா"கிளம்பியது. காதர் பேச்சுக் கொடுத்தான் .தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிப்பைப் பார்த்து..

   "என்ன மச்சான்.!?இவ்வளவு சீக்கிரமா "ஷாப்பிங்"க முடிச்சிட்டீங்க....!!

   "ஏன்டா..!?"சீரியசா"க் கேட்கிறியா .!?இல்ல ,நக்கலா கேட்கிறியா..!?நைட் ஒம்பதரைக்கு மேலே ஆயிருச்சி ..!?ஒனக்கு இது சீக்கிரமா ..!? ஒன் அக்காகூட வந்தா,லேட் ஆகாம என்ன செய்யும்..!?

       "ஹா..ஹா...!இல்ல மச்சான் !சும்மா தான் கேட்டேன்..."என சிரித்தான்.

 நடு பக்கத்து இருக்கையில் ஆயிஷா,சிரித்துக்கொண்டே காதரிடம் கேட்டாள்.  

      "ஏன்டா காதரு .!ஒனக்கு எப்ப கல்யாணம்..!? மாமா மாவள பேசி இருக்குனு கேள்விப்பட்டேனே..!?

    "பார்ப்போம்கா..!! மாமாக்காரரு பொண்ணுத் தர யோசிக்கிறாரு...!காசுக்காரனா நான் இருந்தால்,தருவாக !?என அலுத்துக் கொண்டான்.

      ஆசிப் காதரைப் பார்த்துக் கேட்டான். "நீ ஒழுங்கா இருந்தா பொண்ணுத் தருவாங்க ..!!நீ பொறுப்பில்லாம இருந்தா .,யாரும் யோசிக்க தானே செய்வாங்க..!இதுல ஒம் மாமாவ குத்தம் சொல்லுறே...

காதர் பதில் சொல்லாமல் ,வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.அவன் மௌனத்தை புரிந்துக் கொண்ட ஆசிப் தொடர்ந்தான்.

       "என்ன சத்தத்தைக் காணோம்..!?நீ மட்டும் என்ன யோக்கியனா !?னு என்னை நெனக்கிறியோ...!?

லேசான சிரிப்புடன் காதர் சொன்னான்..

     "இல்லங்க..!அப்படி நெனைக்கல...!!

   "அதான் ஒன் சிரிப்பே சொல்லிருச்சே...ஆமானு...நான் ஒரு நேரத்துல "ஆடினேன்".இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு உக்காந்துட்டேன்,அல்லாவோட கிருபையால ,நானும் ஒரு மனுசனா ,பொண்டாட்டி புள்ளயோட சந்தோசமாக இருக்கேன்....!திருந்த பாரு மாப்ள..!!னு ஆசிப் ஆதங்கத்தோட சொல்லி முடித்தான்.

வண்டி இராமநாதபுரத்தைத் தாண்டி, கீழக்கரை வழி ,இ சி ஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது .காதர் ,ஆசிப்பிற்கோ,ஆயிஷாவிற்கோ நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது.ஒரே ஊர்க்காரன்,அந்த வகையில் ,சிறுவயதிலிருந்தே ஆசிப்பை மச்சான் என்றே கூப்பிடுவான்.அந்த உறவு இதுவரைக்கும் நீடிக்கிறது .ஆசிப் வண்டி வாங்கியதும்,இவனுக்கு "டிரைவிங்"தெரியும் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொண்டான்.

சாலையில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது வாகனம்.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பெய்த மழையால்,சாலையோரங்களிலும், கண்மாய்களிலும் தேங்கிருந்த தண்ணீரால் ,காற்றும் குளிர்மையைத் தாங்கி வந்து தழுவிச் சென்றது."பாட்டைப் போடு மாப்ள "னு ஆசிப் சொன்னதும்,காதர் சுவிட்ச் ஐ தட்டி விட்டான்."உன் விரல்கள் வெள்ளரிப் பிஞ்சிகளோ.!?இல்லை,வெடித்தப் பருத்தி பஞ்சுகளோ..!?என "ஈரத் தாமரைப்பூவே.."பாடல் விட்டதிலிருந்து பாடியது.சிறிது நேரம்தான் கடந்திருக்கும்.ஆயிஷா கைப்பேசி அழைத்தது.பதட்டத்துடன் கைப்பேசியை எடுத்தாள்...!!


     கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.

     "ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக...!!

ஆசிப் மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.

   "எடுத்துப் பேசு! ஏன் லேட்டாச்சினு திட்டுவாக, வாங்கிக்க..."னு சொன்னான்.

ஆசிப்பைச் செல்லமாக முறைத்துக் கொண்டே,அழைப்பை ஏற்றாள்.காதர் பாட்டுச் சத்தத்தைக் குறைந்தான்.

"ஹலோ..."!

"............."!

"இல்ல மாமி,இந்தா வந்துட்டோம்..அரை மணி நேரத்துல வூட்டுக்கு ,வந்துருவோம்.."

"..................."!

"இல்ல,உங்க மகன்தான் லேட் பண்ணிட்டாக..!கூட்டாளிமார்களுக்கு,சட்டை வாங்கனும்னு..."

இதைக்கேட்டதும் பிடரியில் யாரோ,அடிச்சதுப்போல் மனைவியைத் திரும்பிப்பார்த்தான் ஆசிப்.அவள் முகத்தைச் சுருக்கி ,உதட்டைச் சுழித்து கெஞ்சலாகப் பார்த்தாள்.ஆசிப் சிங்கம் அதில் சிதைந்துப் போச்சி,"பாதகத்தி"இப்படிதானே செஞ்சிறா",னு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,ஆயிசா "இந்தா,"அவுகள்ட" கொடுக்குறேன் ,பேசுங்க "னு கைப்பேசியை ஆசிப்பிடம் நீட்டினாள்.வேறு வழியில்லாமல் போனை வாங்கிப் பேசினான்.

"ஹலோ ..."

"............,..........,............,"

"எம்மா !நீம்பாட்ல திட்டாத.,கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..!மகன்காரன் மூத்தவன் என்ன செய்யிறான்..!?

"...........,"

"சரி! தூங்கட்டும், நீ சாப்பிட்டு,மாத்திரய போட்டுட்டுத் தூங்கு,நானும்,ஆயிசாவும் வீட்டுக்கு வந்து,சாப்பிட்டுட்டு சோத்துக்கு தண்ணி ஊத்திறோம்...!

"..............."

"ம்ம்...சரிம்மா வைய்யி"

பேசி முடித்து விட்டு,தன் மனைவியிடம் கைப்பேசியை நீட்டிக் கொண்டே,

"ஏம்ப்லா .!?உங்க மாமியா,மருமக சண்டயில என்னய மாட்டி விட்டே..."எனக் கேட்டான்.

"ஏங்க? மாமி ரொம்பத் திட்டுனாங்களோ...!? என தெரியாத மாதிரிக் கேட்டாள் .

"விக்டா"கீழக்கரை,மாயாகுளத்தை தாண்டி ,ஏர்வாடிக்கு செல்லுவதற்கு ,முன்னால் வரும் பெரிய வளைவு ஒன்றை ,மெதுவான வேகத்தில் வளைந்து வாகனம் செல்லுகையில் ,ஆசிப் ,காதரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

   "ரோட்டோரம், யாரோ கெடக்குறாங்கப் பாரு"னு ஆசிப்பும்,காதரும் இறங்கி ,அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.நிலவு வெளிச்சத்தில் ,மயங்கி கிடந்தவனை புரட்டிப் பார்த்தார்கள்.அவன் மைதீன் தான்,ஆசிப்பின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவன் .மைதீனைப் பார்த்ததும்,இருவரும்,ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்தனர் .காதர் ஆசிப்பிடம் கேட்டான் .

"என்ன மச்சான் செய்ய...!?

"மப்புல" மயங்கி கெடக்குறான்டா..இப்படியே விட்டுட்டுப் போனா "ஒன்னுக்கெடக்க ஒன்னு"ஆகிப் போகும்டா.. வண்டியில கொண்டுப் போயி அவன் வீட்ல எறக்கி விட்ருவோம்"

இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து முன் இருக்கையில் மைதீனைத் திணித்தார்கள் .என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாத நிலையில்தான் அவன் இருந்தான்.ஆசிப் ஆயிசாவுடன் அமர்ந்துக் கொண்டான்.வண்டி கிளம்பியது .

சரி....
யார் இந்த மைதீன்....!!?????


மைதீனைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால்,"எல்லா சேட்டைகளையும் குத்தகைக்கு எடுத்தவன்".திருந்த மாட்டேங்குறானே னு வருந்தியப் பெற்றோர்கள்,கல்யாணம் முடித்து வைத்தால்,திருந்துவான் என ,நன்றாக "ஓதி" படித்த ஏழைப் பெண்ணைக் கட்டி வைத்தார்கள்.அவனோ ,செய்த பாவம் போதாது என கட்டியவளையும் ,சித்திரவதைச் செய்தான்.ஊரும் சொல்லிப் பார்த்தது,உறவும் சொல்லிப் பார்த்தது,அவன் மண்டையில்தான் ஏறாமல் போனது.

         மூன்றாண்டு காலம் இப்படியே கழிந்தது.மைதின் குணமோ மாறவில்லை.அவனைக் கட்டயவள் ,இஸ்லாம் காட்டிய வழியில் ,கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துதான் வந்தாள்.ஆனால் கணவன் இவன், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறியப் போது,கலங்கித்தான் போனாள்.அவள் மார்க்கம் பெண்களுக்கு வழங்கிய,உரிமைகளையும் தெரிந்தவள்.அவ்வுரிமைகளில் ஒன்று,பெண்கள் ,கணவனை விவகாரத்துச் செய்திடும் உரிமை. இவள் எடுத்த முடிவிற்கு,யாரும் இவளை சமாதானப்படுத்த முயலவில்லை.இவள்பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அறிந்திருந்ததால்.விவாகாரத்து ஆகி அவள் பிரிந்துச் சென்று விட்டாள்.மைதீனோ,எப்போதும்போலவே.அதே நேரத்தில்....

        " விக்டா" ஏர்வாடியை வந்தடைந்தது,வலதுப்புறமாக வளைந்துச் சென்றது. பந்து விளையாட்டுத் திடலை ஒட்டிய வீடுதான். மைதீன் வீடு.அவன் வீட்டிற்கு முன்னால்,வண்டி நிற்பதைப் பார்த்து ,அவனது அம்மா வெளியே எட்டிப் பார்த்தாள் .ஆசிப்பும்,காதரும் மைதீனை ,இறக்கியதைப் பார்த்ததும்,பதட்டத்துடன் ஓடி வந்து மைதீனைத் தாங்கி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.ஆசிப்பின் முகத்தை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை அந்த தாய்.இதை ஆசிப் எதிர்ப்பார்த்ததுதான்.

          வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.வண்டி ஆசிப் வீட்டை நோக்கி பயணித்தது.இரண்டுத் தெரு தாண்டிப் போனால்,அவன் வீடு வந்து விடும்,சமீபத்தில் போட்ட சிமெண்ட் சாலையில் ,மெதுவாக ஊர்ந்துச் சென்றது.மைதீன் இவ்வாகனத்தில் ஏறிடும் வரை ஒரு அமைதி நிலவி இருந்தது.இப்போது வெறுமைக் குடிக் கொண்டிருந்தது .

          மைதீன் வாழ்க்கையில் கிடைத்த ஏராளமான அருட்கொடைகளை அறியாதவனாகத் தொலைத்தவன்.அதிலொன்று அவன் கட்டியிருந்த மனைவியும் ஒன்று.அவன் தொலைத்த அந்த வைரம் ,இன்னொருவன் வாழ்க்கை மகுடத்தில் சேர்ந்து அழகு சேர்த்திருந்தது.மைதீன் தொலைத்த வைரத்தை ஏற்றுக் கொண்டவன்தான் ஆசிப்.அவன் தொலைத்த வைரம் தான் விக்டாவில் வந்த ஆயிஷா..!!

(முற்றும்)

  

Saturday 12 September 2015

கவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்!

அதிகாலை இளங்காற்று முகம் தழுவிச்
செல்லுதலைப் போல்!

குளிக்கத் துவங்குகையில்
உச்சந்தலையில் முதல் துளி விழுதலைப் போல்!

காதல் பேச ஆயிரம் வார்த்தைகளிருந்தும் பேசிட முடியாமல் 
பிரியமானவளின் கைதனை இறுகப் பிடிப்பதைப் போல்!

பச்சிளம் குழந்தை முகத்தில் மீசை குத்திடாமல் முத்தம் பதிப்பதுப் போல்!

சீலாக் கருவாட்டு ஆனத்தில் மொச்சைப் பயறின் ருசியைப் போல்!

தொட்டில் குழந்தை தூக்கத்தில் சிரிப்பதனைப் பார்த்ததுப் போல்!

துள்ளிச் செல்லும் நதி நீரில் 
உள்ளங்கால்களை நனைப்பதுப் போல்!

எத்தனை எத்தனையோ
சுகம்தனை அனுபவிக்கிறேன்!

கவிதைகளை 
வாசிக்கையில்
எழுதுகையில்!

கவிதைகள் வரிகளினூடாக
வாழ்ந்துக்கொண்டும்
லயித்துக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் பயணிக்கிறேன்!

"ஒரு மாதிரியாக" என்னைப் பார்க்கும்
இவ்வுலகத்தினை கண்டு கொள்ளாமல் !

      

Thursday 10 September 2015

கருத்து வேறுபாடு...!!


   இன்றைய சூழலில் ,இயக்கங்களாயினும்,கட்சிகளாயினும்,ஏன் குடும்பங்களாயினும்,கருத்து வேறுபாடுகளென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.கருத்து வேறுபாடுகளென்பது வரமா !?சாபமா!? என்பதைச் சிந்திப்பதை விட்டுட்டு ,எதார்தமானது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

      ஏனென்றால் ஒரே தாய் ,தந்தைக்குப் பிறந்து வளர்ந்தாலும் வெவ்வேறு சிந்தனைக் கொண்டவர்களாகவே நாம் உள்ளோம்.அப்படி இருக்கையில் வெவ்வேறு குடும்பங்களாக ,வெவ்வேறு சமூகச் சூழலாக வாழ்ந்த,வாழுபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் எப்படி இல்லாமல் போகும்.ஒவ்வொருவரின் கைரேகைப் போலவே,ஒவ்வொருவரின் எண்ணங்களும் வெவ்வேறானவைகள்.கீ.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் .இவ்வாறாக "கருத்து வேறுபாடு என்பது வேறு.கருத்து முரண்பாடு "என்பது வேறென்று.ஆம் ,வேறுபாட்டையும் ,முரண்பாட்டையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஊருக்கு நாம் செல்ல வேண்டும்,அதற்கு நாம் பேருந்தில் போக முடிவெடுக்கிறோமென்றால்,கூட வருபவர் ரயிலில் போவோமென்றால் ,இதுதான் கருத்து வேறுபாடு இருவரும்,அவ்வூருக்குப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருவருக்கும் இல்லை,ஆனால் எதில் போகனும் என்பதில் தான் கருத்து வேறுபாடு.அவ்வூருக்கு போகவே கூடாதென்றால் அதுதான் கருத்து முரண்பாடு.

       சரி !கருத்து வேறுபாட்டினை எப்படிக் களையலாம்!?தான் கொண்ட கருத்து தான் சிறந்தது என்று எண்ணும் எண்ணத்தினை மாற்றிட வேண்டும்.எதிரணியின் கருத்தினையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.அக்கருத்தினில் உண்மை இருக்குமானால் ,மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் நம்மிடையே வேண்டும்.ஏனென்றால் சிறுவயதில் நிலா நம்முடன் வருவதாக எண்ணி குதூகலித்த காலமும் உண்டு.பின்னாளில்தான் நாம் உணர்ந்தோம்,நிலாவைப் பார்த்துக் கொண்டேதான் நாம் நடந்தோம் என்பதை.சில காலம் கழித்து நாம் உணரலாம்,மாற்றுக் கருத்துடையவரின் கருத்து சரிதான் என்று.இலையில் தேங்கி இருக்கும் ஓர் துளியினை ஒருவர் 
மழைத்துளி எனலாம் ,மற்றவர் பனித்துளி எனலாம்.மழையா !?பனியா !?என இருவரும் சண்டையிடாமல்,"துளி" என்று இருவரும் கொண்ட ஒத்தக் கருத்தில் ஒன்றிணையலாமே.....!!!

      

Tuesday 8 September 2015

என் ஆசைகள் ..!!


மயிலிறகாகி கவிதைப் புத்தகத்தினுள்  ஒளிந்திட !

தாய்ப்பாலாகி குழந்தை முகத்தில்  வாசமாகிட!

ரத்தத்துளியாகி தாய் நாட்டிற்காகப் போராடும் போராளியின் உடலில் ஓடிட!

மழைத்துளியாகி மல்லிகை மொட்டினுள் தங்கிட!

தாவணிமுனையாகி பிரியமானவளின் முக்காடாக மாறிட !

பேனாவின் மைத்துளியாகி,புரட்சியாளனின் எழுத்தினில் ஓர் புள்ளியாகிட!

வாழ்வை அர்த்தமாக்கி,மரணத்திடும்போதும் புன்னகைத்திட !


      


Monday 7 September 2015

போராடு....!!


        படைப்புகளில் சிறந்த படைப்பு மனித படைப்பு.ஆனால் படைக்கப்பட்ட மற்றப் படைப்புகளெல்லாம்,தன் படைக்கப்பட்ட நோக்கத்தையடைகிறது.ஆம் !ஏதோ ஒரு வகையில் எதற்காகவேனும் பயன்படுகிறது.ஆனால் மனித இனம்.!?தன் படைப்பின் நோக்கத்தை அறிய முனைகிறதா !?தன்னுள்ளிருக்கும் திறமைகளை அகக்கண் கொண்டுப் பார்க்கிறதா .!?என்றால்,பெரும்பாலோர் அறியவில்லையென்பதும்,அறிய முயல்வதில்லையென்பதுதான்,நாம் கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

               அதே வேளையில் சிலரோ,தன் பிறப்பை,இருப்பை அர்த்தமாக்கிடத் துணிகிறார்கள்,பயணிக்கிறார்கள்.அந்த லட்சியப் பயணத்தில் பயணித்திடும்போது,வாய்ப்புகள் கிடைத்திடாத போது,கிடைத்த வாய்ப்புகள் கை நழுவிடும்போது,உறவுகளின் ஏளனப் பார்வைகளின் போது,சமூகத்தின் கேலி கிண்டலின் போது,தளர்ந்துப் போகிறார்கள் .விரக்தி அடைகிறார்கள்.அதனால் "பத்தோடு பதினொன்றாக" கலந்து விடுகிறார்கள் .தான் கொண்ட கனவினையும்,லட்சியத்தையும் அனாதைகளாக்கி விட்டு "கிடைத்ததை" வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் .

      ஓ! லட்சியம் கொண்டவர்களே! சாதிக்க வேண்டும் எனும் உரம் கொண்டவர்களே! கலங்காதீர்கள்!கவலைப்படாதீர்கள்!உங்கள் லட்சியம் ஓர் நாள் வெல்லும்.அன்றைக்கு,உன் செயலைப் பார்த்து "ஆமாம் "என்று இன்று இழுத்து பேசி ,உன்னை இகழ்ந்துப் பேசியக் கூட்டம் "ஆஹா..!!"என்று சொல்லும் காலமும் வரும்.ஆயிரம் கதவுகளைத் தட்டு தவறில்லை.உனக்காக எங்கோ ஓர் கதவு ,திறந்து காத்துக் கொண்டுதான் இருக்கும்,உன் வரவிற்காக.இன்றைக்கு சாதித்தவர்களின் கடந்த காலத்தைப் படித்துப் பார்.காயங்களையும்,அவமானங்களைத் தாங்கித்தான் அவை இருக்கும்.உன் மேலும் ஒரு நாள் உலகின் பார்வை விழும்,அப்பொழுது உன்னால்,நீ பிறந்த மண்ணும்,உன்னைத் தாங்கிப் பிடித்தவர்களும்,உன் தேசமும் பிரகாசம் அடையும்.இதுவரைக்கும் ராமேஸ்வர மீனவர்களின் அழுகுரலைத் தான் இந்த உலகம் கேட்டுக் கொண்டிருந்தது .ஆனால் அதே உலகம் ராமேஸ்வரத்தைப் பார்த்து அழுததென்றால்,அதே மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் மறைவிற்குத் தான்.ஆதலால் நீ எங்கே நிற்கிறாய் என்பதல்ல முக்கியம்,எதை நோக்கி நிற்கிறாய் என்பதே முக்கியம். போராடத் துணிந்தவனுக்கே இவ்வுலகம் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்,போராடத் தயங்கியவர்களை சமாதிகள் என்று இவ்வுலகம் தீர்மானித்து விடும்.ஆதலால் போராடு,போராடு .வெல்லும்வரைப் போராடு.

     

Saturday 5 September 2015

அரசியல் படி..!!



         "வேலை வெட்டி இல்லாதவனுங்க,வெட்டிப் பயலுவ,இவனுங்கெல்லாம் உருப்படவா..!?"இப்படியாக எத்தனையோ,வசைச் சொற்கள். முழு மனித சமூகத்திற்காக,உழைத்திட,அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தந்திட உழைக்கும் அரசியல் களம் காணும் சொந்தங்களை ஏளனப்படுத்துகிறது,கேவலப்படுத்துகிறது.சில ,பல நாக்குகள்.அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு "அரசியல் ஒரு சாக்கடை"அதில் இறங்கக் கூடாது.நாமும் நாறிடுவோம் என்பது.

           ஓ!"சுத்தப்பத்தமானவர்களே!
கொஞ்சம் பொறுங்கள்.நீங்கள் சொல்லும்,அந்த அரசியல் சாக்கடையில் தான்,செந்தாமரையாய் மலர்ந்து மணம் வீசினார்கள் .கர்ம வீரர் காமராசர் அவர்களும்,கண்ணியமிகு காயித மில்லத் அவர்களும்.நாம் அவர்களது சாதனைகளை வாய்கிழிய பேசுகிறோம்.ஆனால் களமாட மட்டும் "சப்பைக் கட்டு" கட்டுகிறோம்.இது எப்படி இருக்கிறதென்றால் !?,மாம்பழச் சாறு குடிக்கும் நாம் அறிவாளிகளாகவும்,விதைத்து,பாதுகாத்து மாம்பழத்தை பறித்து ,விற்பவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது போன்றுள்ளது.

        நாட்டின் மேல் நேசம் கொண்டவர்களும்,மனித சமூகத்தின் மேல் அக்கறைக் கொண்டவர்களும்,எனக்கென்ன !?என ஒதுங்கியதால்தான் ,நம் தேசம் "கொள்ளையர்களாலும்",கொலைகாரர்களாலும்" மாறி மாறி ஆளப்படுகிறது .இப்படியே இது பழகிப் போனதால் ,அரசியலுக்கு வர வேண்டுமானால் ,கொள்ளை,கொலைச் செய்ய வேண்டும் என பாமரன் புத்தியில் பதிந்தும் விட்டது.ஆதலால் இன்றோ,அழகான நம் 
இந்தியத் தேசம் அலங்கோலமாகி விட்டது.மதயானைக் கூட்டம் புகுந்த சோளக்காடாய் ஆகி விட்டது.அரசியல் அதிகாரம் எனும் ஆயுதம் நல்லவர்கள் கையிலிருந்தால்,நாட்டைப் பாதுகாக்கும்,அதே அதிகாரம் அநியாயக்காரர்களின் கையிலிருந்தால்,நாட்டைச் சுடுகாடாய் மாற்றி விடும்.நம் நாட்டைப் பாதுகாக்க!நியாயவான்களே அரசியலையும் படிங்க!!

     

Thursday 3 September 2015

கல்லானாலும் கணவனா .!?


                 "ஏன்டி .!?நான் ஆம்பளடி அப்படித்தான் செய்வேன் ..!ஒனக்கென்ன !,?ஒழுங்க பொத்திக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு......."".....""இப்படியான வார்த்தைகளை ஏராளமாக,தாரளமாக கேட்க முடிகிறது.சில இடங்களில்.


       மேலும் சிலரோ,இரண்டு,மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே,"காரணமாக"இருந்து விட்டு,தன் மனைவிக்கோ,தன் மக்கள்களுக்கோ செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு,வெறுமனே சோற்றுக்குத் தண்டமாகவும்,பூமிக்கு பாரமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்திற்காக பெண்கள் வேலைக்குச் சென்று ,குடும்பப் பாரத்தைச் சுமக்கிறார்கள்.தன் பிள்ளைகளுக்காகவும்,தன் மானத்துடன் வாழ்வதற்காகவும்.

          ஆண் என்பவன் கூடுதல் வலிமையுடன் படைக்கப்பட்டுள்ளான்.அவ்வலிமையைக்கொண்டு தன் குடும்பத்தை,தான் சார்ந்திருக்கும் மனித சமூகத்தை மேம்படுத்தவே,அவ்வலிமையைப் பயன்படுத்தியாக வேண்டும்.அப்படி எவனோருவன் வாழ்கிறானோ ,அவன்(ர்) தான் ஆண்மகனாகத் திகழ்கிறான் .

"பெற்றவளையும்
கட்டியவளையும்
கண்ணீருடன் வைத்திருப்பவன்!

ஆம்பிள்ளையென்று சொல்லதே!
உதட்டின் மேல் மீசை இருப்பதால்!"என்று நான் என்றோ எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது.

ஆண்களே!
                கல்லாய்தான் இருப்பேன் என்றால்,ஏதாவது ஒரு கல்லை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் .மென்மை கொண்ட பெண்மையை நசுக்குவது ஆண்மைத்தனமல்ல,அது அடி முட்டாள் தனம்!