Saturday 3 October 2015

சண்டியர்.!(சிறுகதை) (2)


           அஜீஸைப் பற்றி கொஞ்சம் பார்த்திருவோம்.இவன் தகப்பனார் சிங்கபூர் குடியுரிமை பெற்றவர்.இவன் இங்கே பிறந்து ,ஏழு வயது வரை இங்கேதான்  வாழ்ந்தான்.பிறகு தன் தாயுடன்,சிங்கபூர் சென்றான் தன் தகப்பனார் முயற்சியில் ,அப்படியே படிப்படியாக சிங்கபூர் குடியுரிமை பெற்று விட்டான்.ஐந்தாறு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த ஊருக்கு வந்து,சில மாதங்கள் தங்கி விட்டுப் போவான்.அப்படித்தான் இந்த முறையும் வந்திருந்தான்.சலீமுடன் அவனுக்கு ஒரு இடைவெளி,எப்போதும் இருக்கும்,அது ஏனென்று இருவருக்குமே தெரியாது.ஆனாலும் எங்காவதுப் பார்த்துக் கொண்டால்,ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள்,இல்லையென்றால் ஒதுங்கியே போய் விடுவார்கள் .இப்போது தன் சின்னம்மா மகன் மீராசாவை அடித்து விட்டான் என்பதில் கோபமானான்.அந்த கோபத்தை கூட சுற்றப் போனவர்கள் ,அணைந்திடாமல் எரிய வைத்திருந்தார்கள்.


          ஊருக்கு வந்த அஜீஸ்,நேரடியாக சலீமுடன் மோதிக்கொள்ளாமல்,சாடையாகப் பேச ஆரம்பித்தான்.அவன் ,இவனைத்தான் பேசுகிறான் என்பதை சலீம் புரிந்துக் கொண்டான்."நேரே வந்து வம்பு பண்ணு..அப்போ இருக்கு ஒனக்கு"என சலீம் கொதித்துக் கொண்டிருந்தான்.

       சில நாட்களில் கீழக்கரை மணல் மேட்டில் கைப்பந்துப் போட்டி பெரிய அளவில் நடத்த இருப்பதாக ,தகவல் வந்திருந்தது.அதுவரைக்கும் "சும்மா"இருந்த மருதநாயகம் திடல்,பரபரப்பானதாக மாறிப் போனது.தினமும் கைப்பந்துப் பயிற்சி தான்,சலீமிற்கு கைப்பந்தாட ஆசைதான்.ஆனால் விளையாடத் தெரியாது.அதனால் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பந்து ,குடிகாரனை கட்டிய மனைவியைப்போல,அடிபட்டுக் கொண்டும்,"கிழி"ப்பட்டுக் கொண்டும் இருந்தது.

      அப்போது அஜீஸ்,சலீமிடம் வந்தான்.
"வா ,கொஞ்சம் உன்கிட்ட பேசனும்" என்றான்.அதற்காகவே காத்திருந்ததுப் போல்,உட்கார்ந்து இருந்தவன் எழுந்தான்.இருவரும் திடலுக்கு அருகிலிருந்த பள்ளத்திற்கு சென்றார்கள்.அங்கு கருவேலமரங்கள் அடர்த்தியாக இருக்கும்.இருவரும் சென்றதை பந்து விளையாட்டை,உன்னிப்பாக கவனித்தவர்கள்.இவர்களைப் பார்க்கவில்லை .சில நிமிடங்கள்தான்,கழிந்திருக்கும்.அப்போது அடிபட்ட பந்து பள்ளத்தை நோக்கி ஓடிவிட்டது.அதனையெடுக்கப் போனாவன்.

"ஏய் !எல்லாரும் இங்கே வாங்கப்பா...ஒரே ரெத்தம்பா."என
அலறிக் கொண்டு,பந்து விளையாடியவர்களை அழைத்தான்.


       பந்து விளையாடியவர்கள்,
வேடிக்கைப் பார்த்தவர்கள் என எல்லோரும் ஓடிப் போய்ப் பார்த்தார்கள். சலீம் முகத்திலும்,அஜீஸ் முகத்திலும் ரத்தங்கள் அப்பிக்கொண்டும்,வடிந்துக் கொண்டும் இருந்தது.என்னமோ "முகம்மது அலி-மைக்டைசன்"என நினைப்புப் போல இருவருக்கும்,இன்னும் விடாமல் மாறி மாறி ,மூர்க்கமாக தாக்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.ஓடிப் போய்ப் பார்த்தவர்கள் .கஷ்டப்பட்டு இருவரையும் 
பிரித்தார்கள். அதற்குள் அவர்களது உறவுகள் வந்து ,கூட்டிச் சென்றார்கள்.அவர்களது முகம் ,அவர்களுக்கே அடையாளம் தெரிய ஒரு வார காலம் ஆகலாம்,அந்த அளவிற்கு முத்தங்களாகப் பதிந்திருந்தது குத்துக்கள்.


       "நீ என்னத்துக்கு மீராசாவை காப்பாத்த போனே.!அந்த நன்றி கூட இல்லாமல் இப்படி அடிச்சிருக்கானே.."மங்கரையான் திம்பான்"என சலீம் அம்மா ,தன் வீட்டிற்கு வந்தபின் அஜீஸைத் திட்டினாள்."ஏன்டா..!?சலீமைப் போய் அடிச்சே..அவன்தானடா மீராசாவ கூட்டி வந்தான்"என அஜீஸைத்தான் அதட்டினார்கள்.அவனது உறவுகள்.சில வாரங்கள் கழிந்தது.அஜீஸ் சிங்கபூர் பயணம் கிளம்பி விட்டான்.அதற்கிடையில் இருவரும் சந்திக்கவில்லை.

         காலம் கரைந்தோடியது. நாட்கள் வாரங்களாக,வாரங்கள் மாதங்களாக,மாதங்கள் வருடங்களாக ஓடியது.ஏழெட்டு வருடங்களானது,அதற்கிடையில் சலீமிற்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைக்கு தகப்பனாகி இருந்தான்.அஜீஸ் சண்டை பிரச்சினையில் ஈடுபட்டு,சிங்கபூர் சிறையில் இருப்பதாக ,ஊருக்குள் ஒரு பேச்சு அடிப்பட்டது.

         காலம் மர்மமானது,ஆச்சர்யமானது,அது போடும் 
முடிச்சுக்கள்,மனித மூளைச் சிந்தனைக்குள் அகப்பட முடியாத நுட்பம் கொண்டது.ஆம் !சலீமின் மனைவியின் தம்பிக்கு,சிங்கபூர் குடியுரிமைப பெற்ற உறவுக்காரப் பெண்ணிற்கும் திருமணம்,சிங்கபூரில் நடைபெற இருந்தது .அதற்கு சலீம் குடும்பத்தை கட்டாயம் வரச் சொல்லி அழைத்தான்.அவசரமாக கடவுச்சீட்டு(பாஸ்போர்ட் )விண்ணப்பித்து எடுத்து,சலீமின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் சிங்கபூர் சென்றார்கள்.

தானும் ஒரு நாள் சிங்கபூர் செல்வேன் என கனவில் கூட நினைக்காத  சலீம் சிங்கபூர் வந்து விட்டான்.சலீம் சிங்கை வந்த ஒரு வாரத்தில்,அஜீஸ் "உள்ளே"இருந்து வெளியில் வந்து விட்டான்.

     

        புக்கிட் பாத்தோக் சமூக நிலையத்தில் இரண்டாவது தளத்தில்,உற்றார் ,உறவுகள் சூழ திருமண உடன்படிக்கை நடந்தது.ஆண்களும்,பெண்களுமாக அவ்விடம் நிரம்ப ஆரம்பித்தது.புன்னகைகளால் மின்னிக் கொண்டும் இருந்தது .வந்தவர்களில் தனக்குத் தெரிந்தவர்களிடம் ,நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் சலீம்.அப்போது எதிர்பாராமல் வந்தான் கல்யாணத்திற்கு அஜீஸ்.சலீமிற்கு தர்ம சங்கடமான சூழல்,கல்யாணத்திற்கு வந்தவனிடம் எப்படி முகத்தைத் திரும்புவது !?எனத் தயங்கியவனாக ,லேசான புன்னகையுடன் ,தலையாட்டினான் "வா" என.அஜீஸும் பதிலுக்கு தலையசைத்து விட்டுச் சென்றான்.


     வந்தவர்கள் ,மணமக்களைச் சந்திக்கவும்,வாழ்த்துவதுமாகவும்,விருந்துண்பதுமாக இருந்தார்கள்.சிறிது நேரம் கழிந்தது.அஜீஸ் ,சலீம் அருகில் வந்தான்.

"வா !கொஞ்சம் பேசனும் "என்றான்.

      சலீம் வந்த இடத்தில் ,பிரச்சனையானால் நல்லா இருக்காதே"என தயங்கிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்.இருவரும் 
முதல் தளத்திற்கு வந்தார்கள்.அங்கு உட்கார்ந்துப் பேசுவதற்காக செய்யப்பட்டிருந்த,இருக்கையில் எதிர்,எதிரே அமர்ந்தார்கள் .அஜீஸ் "மார்ல்ப்ரோ"சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.பிறகு சலீம் பக்கம் ,சிகரெட்டை நீட்டினான்."நீ ஒன்னு எடுத்துக்கோ"எனும் தோனியில்.சலீம்
சொன்னான்.

"இல்ல அஜீஸ் !இப்ப இதெல்லாம் விட்டுட்டேன்."என்றான்.

"ம்ம்..."என தலையாட்டியவனாக,ஏதோ குழப்பமும் ,கவலையுமாக சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தவன்,சலீமிடம் கேட்டான்.

"கேள்விப்பட்டேன்..இப்ப "தண்ணியெல்லாம்"விட்டுட்டியாமே...ஆடம்பரமா நடக்க இருந்த கல்யாணத்த ,சிம்பிளா முடிக்க வச்சது,நீதானாமே...!?எப்ப இருந்து நீ "மாற" ஆரம்பிச்சே..."என ஒரு ஏக்கத்துடன் கேட்டான்.

   "ம்ம்...ஆமாம் .!நாம அன்னைக்கு அடிச்சிக்கிட்ட பிறகு,என் உம்மா வடிச்ச கண்ணீர் தான்.என்னால என் உம்மாவுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.நான் "கழிசடையா" தெரியும்போது,சொந்தங்காரவங்க கூட செத்த நாயை,பார்க்குற மாதிரி பார்த்தாங்க,ஆனா என் உம்மா என்னையத் தாண்டா ஒலகமா சுத்தி வந்துச்சி .,அப்போ தான் நெனச்சேன்,ஆடு,மாடு கூட யாருக்காவது ,எதுக்காவது பயன்படுது..ஆனா மனுசனுங்க நாம ஏன் யாருடைய கண்ணீருக்கோ,காரணமா இருக்கிறோமே னு கலங்க ஆரம்பிச்சேன்...சின்ன புள்ளயில கடமைக்கு,ஓதிப் பார்த்த குர்ஆனையும் ,நபி வாழ்க்கையையும் ,வாழ்க்கைக்கு வழி காட்டும்ங்ற ,நம்பிக்கையில படிச்சேன்.,என்னை மாத்துச்சி....""என கலங்கிய கண்களுடன் சொல்லி முடித்தான் சலீம் .

    இவன் சொன்ன வார்த்தைகள் ஏதோ ஒரு வகையில் அஜீஸைச் சுட்டது.அவன் முகம் இறுக்கமானதாக இருந்தது .அஜீஸின் தாய் சில மாதங்களுக்கு முன்னால்,இறந்திருந்தாள்.அவள் எத்தனையோ முறை ,இவனைத் திருந்தச் சொல்லி அழுது புலம்பி இருக்கிறாள்.இவன் தான் திருந்தாததுப் போனதை இப்போது எண்ணியதும்  மனம் பாரமாக இருந்தது .காலமெனும் உளி ,சலீமெனும் பாறையை செதுக்கி இருந்தது.அஜீஸை பதம்பார்த்து இருந்தது .இருவரும் கடும்தவம் போல்,பேச வார்த்தைகளின்றி அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

        அம்மௌனத்தை கலைக்கும் விதமாக ,இஷா தொழுகைக்கான பாங்கு ,சலீம் கைப்பேசியில் கேட்டது.சலீம் எழுந்து நின்றவனாக,அஜீஸை அழைத்தான்."வா!தொழுதுட்டு வருவோம் "என.முதலில் "இல்ல ,நீ போயிட்டு வா"என்றவன்.சலீம் கையை பிடித்து இழுத்ததும்,தவிர்க்க முடியாமல் சென்றான்.

      இருவரும் அருகிலிருந்த தண்ணீர் குழாயில் "ஒளு"செய்து விட்டு ,சுத்தாமன ஒரு அறையில் ,சலீம் இமாமாகவும்,அஜீஸ் அருகில் நின்றும் தொழ ஆரம்பித்தார்கள்.தொழுகை முடிந்து சலீம் திருப்பிப் பார்க்கையில் ,அதிர்ச்சியுடன் திகைத்தான்.ஏனென்றால் அவன் தொழ ஆரம்பிக்கையில் ,அஜீஸ் மட்டும்தான் நின்றான்,பிறகு இன்னும் சிலர் சேர்ந்திருந்தார்கள்.சங்கையான பெரியவர்களும்,திருமணத்திற்கு வந்த ஹஸரத்மார்களும்.இப்பெரியவர்களுக்கு முன்னால்,நான் நின்று தொழுகை நடத்தினேனா !?என எண்ணி நெகிழ்ந்தான் சலீம்.

       பிறகு அவரவர்கள் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்.அப்போதை அஜீஸ் ,தொலைந்த தன் வாழ்க்கையை எண்ணி,செய்திட்ட பாவத்தை எண்ணி,இனியாவது திருந்தி வாழ ,வழி காட்டு யா அல்லாஹ் !!என ஏந்திய கைகளுக்குள், முகத்தை மறைத்து கண்ணீர் வடித்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

    சலீமோ,சஜ்தாவில் விழுந்தவனாக,"சாக்கடையில் விழுந்து கலந்திட இருந்த மழைத்துளி என்னை,சிப்பியில் சேர்த்து முத்தாக்கிய யா! அல்லாஹ் !என தேம்பி,தேம்பி அழுது இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் சலீம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ,தவறுவதற்கும் ,திருந்துவதற்கும் வாய்ப்பைத் தருகிறது .நாம் எப்படி !?என்று நம் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டால் நல்லது.

  (முற்றும்)

    

No comments:

Post a Comment