Sunday 18 October 2015

தகிக்கிறேன் நான்!


வெளிச்ச ஆடையை களைந்து விட்டு
கருப்பு நிற ஆடையை அணிய ஆயத்தமான வானம் !

நீள் மரங்களிடையில் சிதறிய
ஒளிக்கீற்றுகள்!

கொலுசுக்கட்டி நடந்திடும் நீரோடை!

பச்சைப் போர்வையை போர்த்திக் கொண்ட மலைகள்!

பசியோடு பறந்து சென்று வயிறு நிறைந்து
கூடு திரும்பும் பறவைகள்!

காற்றுடன் காதல் பேசும் பூக்கள்!

பூவிதழில் தேன் குடித்துக்கொண்டே சிறகசைக்கும்
பட்டாம்பூச்சிகள் !

இப்படியான காட்சிகளை கவிதைகளாக 
காணும்
இத்தருணத்தில் தகித்துதான் போகிறேன்!

பிடித்தமான ஒரு கவிதைப் புத்தகத்தினை 
பிரித்து படிக்கவா !?

இல்லை!

பிரியமானவளே உன்னை நினைத்து
ஓர் கவிதை எழுதிடவா !? என்று!

        

No comments:

Post a Comment