Monday 1 May 2017

நிஸாவின் கையெழுத்து -4



       அவர் வந்ததும் க்ளாஸ் ரூமே ,சத்தம் மூச்சி இல்லாம இருந்தது.உள்ளே வந்தவர் கடைசி பெஞ்சில ,உக்காந்திருந்த என்கிட்ட நின்னுக்கிட்டு,"என்னடா ..!?டம் டம்னு சத்தம் கேட்டுச்சி...யாருலே தட்டுனது...ஒழுங்கா எந்திரிக்கியளா..!?இல்ல எல்லாபயலுகளயும்..அடிச்சி சாகடிக்கவா..னு ,சத்தமா கேட்டாரு.எனக்கு சந்தேகம் நாம அடிச்சதுல வந்த சத்தமா..!?இல்ல..தம்புச்சாமி ஆடுனதுல வந்த சத்தமானு ,எனக்கு கொழப்பமா இருந்துச்சி..ஆனாலும்..எப்படி இருந்தாலும்,எங்கிட்டதானே நிக்கிறாரு...எப்படியும் எங்கிட்ட இருந்துதான் ஆரம்பிப்பாரு அடிக்க,அதுக்கு நாமளே ஒத்துக்கிட்டு ,அடியை வாங்கிக்கிருவோம்னு,எந்திரிக்கிறதுக்குள்ள ,தம்புச்சாமி எந்திரிச்சிட்டான்.உடனே ,வெளிய வா..னு கூப்பிட்டு,"பின்னி பெடல"எடுத்துட்டாரு.அடிய வாங்கிட்டு,அவன் எடத்துல உக்காந்துட்டு,சோத்தங்கை பக்க புருவத்த தூக்கி ஒரு சிரிப்பு சிரிச்சான்."எப்புடி நாமல்லாம் சிங்கம்ல"னு சொன்னது மாதிரி இருந்துச்சி.

      படிக்கிற எல்லாரும்,பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு மும்முரமா இருந்தாங்க.எனக்கு படிப்பு மேல பிரியமில்லாம போச்சி.ஏன்னா..என் குடும்ப சூழல் அப்படி...பழய வீடு..கஸ்டம்.. சொந்தக்காரங்க ஏளனமா பாத்ததுனு நெறய இருக்கு.அதனால படிப்பு மேல ஆசயில்லாம போச்சி.படிப்ப விட்டுட்டு பொழைப்ப தேடி ஓட ஆரம்பிச்சேன்.

    கூட படிச்சங்கள அப்ப அப்ப அங்க இங்கனு பாப்பேன்.2004 காலகட்டம்,எங்க பகுதிகள்ல "விடியல் வெள்ளி"குரூப்புனு பிரபலமாகி கிட்டு இருந்தாங்க.அதுதான் பின்னால "மனித நீதி பாசறை"னு சொன்னாங்க.இப்ப அந்த அமைப்போட பேரு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா.அந்த "மனித நீதி பாசறை"அமைப்புல ,சில பேரு சேந்து இருந்தாங்க.அந்த அமைப்புக்காரவங்க ,ராம்நாடு சின்னக்கடை தெருவுல,ஒரு பொதுக்கூட்டம் போட்டு இருந்தாங்க.அந்தக் கூட்டத்துக்கு,ஒப்பிலான்ல இருந்து, அந்த நிகழ்ச்சிக்கு ஒதவியா இருக்க,கொஞ்ச பேரு போயிருந்தாங்க.அதுல ஆரிபும்,முசாபர் அலிங்கிற ரெண்டு பேரு.பொதுக்கூட்டம் முடிஞ்சி,மறுநாள் "பைக்"ல அவுக ரெண்டு பேரும் வரயில,ஆக்சிடென்ட் ஆகிட்டாங்க.கீழக்கரை அவுட்டர்ல.அதுல ரெண்டு பேருக்கும் ,நல்ல அடி.அவுக ரெண்டு பேரையும் பாக்க,மறு நாள் ராம்நாட்டுக்கு,கெளம்பி போனேன்.

      ஒப்பிலானுக்கு ஆறரை மணிப்போல,மயில்வாகனம் பஸ் வரும்,அதுல போயி அஞ்சி கிலோ மீட்டர் தள்ளிப் போனா,முக்கு ரோடு வரும்.அங்க எறங்கி நின்னமுன்னா,கொஞ்ச நேரத்துல கடலாடியில இருந்து,"செதம்பரம்"பஸ்
ராம்நாட்டுக்கு வரும்.அதுல ஏறிப்போனா எட்டரை மணிப்பாக்குல போயிறலாம் ராம்நாட்டுக்கு.அப்படிதான் நானும் அடிபட்டிருந்த,அந்த ரெண்டுப்பேரயும் பாக்க,ராம்நாட்டுக்கு போக,முக்குரோட்டுல ,நின்னுக்கிட்டு இருந்தேன்.அப்ப பக்கத்து கருவ மர,நெழலுல நெறமாச வவுத்துப் புள்ளக்காரியா,என்னோட படிச்ச சரிபு நிஸா நின்னுக்கிட்டு இருந்துச்சி,அதுகூட ஒரு நடுத்தர வயசு பொம்பளயாளும் இருந்தாங்க.அவுக நிஸாவோட அம்மாவாக இருக்கலாம்னு நெனச்சிக்கிட்டேன்.ஆனா எதுவும் நிஸாகிட்ட நான் பேச முடியல.வாழ்க்கையில செட்டிலாகிருச்சினு நெனச்சிக்கிட்டேன்.

      அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சி,எங்க ஊரு IOB பேங்குல வச்சி,விஜயலக்ஷ்மிய பாத்தேன்.என்னை அடையாளம் கண்டு அக்கறையா பேசிச்சி."என்ன நல்லா இருக்கியா..!?கல்யாணமெல்லாம் பண்ணிட்டியானு..!?,நானும் ஆமானு சொல்லிட்டு,"நீ கல்யாணம் பண்ணிட்டியானு கேட்க முடியல,ஏன்னா கையில கொழந்தையும்,கழுத்துல தாலியுமா நின்னுக்கிட்டு இருந்தாப்ல விஜயலக்ஷ்மி .

(தொடரும்...)

    

No comments:

Post a Comment