Wednesday 17 December 2014

கவிதையே!

கவிதையே!
என்னை விழுங்கும்
விதையே!

ரோஜா இதழ்களைப்போல்
என்னிதழில் உரசுகிறாய்!

ரசித்து லயிக்கும் வேளையில்
முள்ளால் குத்தியும் கிழிக்கிறாய்!

கோடையில் மழைச்சாரலாய் வந்து
உள்ளம் குளிரச் செய்கிறாய்!

கொலைவெறிக்காற்றுடன் வந்து
குலை நடுங்கவும் செய்கிறாய்!

சிந்தனையெனும் சிகரத்திற்கு அழைத்துச் சென்று
சித்தம் சிலிர்க்கச் செய்கிறாய்!

திடுமெனச் சிகரத்திலிருந்து தள்ளிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்கவும் செய்கிறாய்!

சொல்வதெற்கெல்லாம்
பூம் பூம் மாட்டைப் போல
தலையையும் ஆட்டுகிறாய்!

அசந்திருக்கும் வேளையிலே
ஆளைக் கொல்ல பாய்ந்து வரும்
ஜல்லிக்கட்டு காளையாகவும் மாறுகிறாய்!

பருவப்பெண்ணாய் வெட்கத்தால்
சிவக்கவும் செய்கிறாய்!

பக்கம் வரும் வேளையிலோ
பளப்பளக்கும் அருவாளை நீட்டுகிறாய்!

சொல்லிடு!
கவிதையே சொல்லிவிடு!

நீ என்னை
கவிஞனாக்கப் போகிறாயா.!?

இல்லையென்றால்
கழுத்தை நெரிக்க நெருங்குகிறாயா..!?

       

3 comments: