வாழ்வதென்பதென்ன
சொர்க்கப்பூஞ்சோலையா.!?
அமைதியாய் துயில் கொள்ள..!
விதையாய் விழுந்தேன்
துளிராய் முளைத்து
செடியாய் வளர்ந்து
மரமாய் விரிந்து
பெரும் மரமாய் ஆனேன்
என்னிலும்
பூ பூத்தது
காய் காய்த்தது
பழம் பழுத்தது
விதைகளும் விழுந்தது
பறவைகள் வரும்
பழம் தின்னும்
எச்சத்தை மிச்சம்
வைத்துச் செல்லும்
படர்ந்த மரம் நான்
பட்ட மரமானேன்
எனது வழி விதைகளும்
என்னில் நின்று தின்ற பறவைகளும்
காத்திருக்கிறது.!
எப்போது முதுமலரின் அந்திமம் முடியும்
கொள்ளி வைத்து செல்லலாம் என்று.!
காற்றில் கலந்த நறுமணமா!?
வார்த்தைகுள் அடைந்த அர்த்தமா.!?
முத்தத்தின் இதமா.!?
உச்சத்தின் சுகமா.!?
மேகத்தின் இடியா!?
மின்னலின் ஒளியா.!?
கோடையின் வதையா.!?
இரவின் கதையா.!?
பூ தலையாட்டும் தென்றலா.!?
புல்லாங்குழல் தரும் இசையா.!?
இறைவனிடம் கேட்ட பிரார்த்தனையா.!?
இறைவன் இட்ட பிச்சையா.!?
இதில்
எது நான்
இது
எல்லாமும் நான்.!
குழந்தைகள்
உலகிற்கு வந்த வெள்ளை காகிதங்கள்
அதில்
தகப்பன் ஒரு பக்கம்
தாய் ஒரு பக்கம்
உறவுகள் ஒரு பக்கம்
சுற்று சூழல்கள் ஒரு பக்கம்
சமூகம் ஒரு பக்கம்
இப்படி பக்கம் பக்கமாக
தப்பும் தவறுமாக
அக்காகிதத்தில் எழுதி விட்டு
தப்பெல்லாம் குழந்தைகள் மேல்தான் என
குற்றஞ்சொல்லும் பைத்தியக்கார உலகை நினைத்து
குழந்தைகள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் .!