Saturday 5 September 2015

அரசியல் படி..!!



         "வேலை வெட்டி இல்லாதவனுங்க,வெட்டிப் பயலுவ,இவனுங்கெல்லாம் உருப்படவா..!?"இப்படியாக எத்தனையோ,வசைச் சொற்கள். முழு மனித சமூகத்திற்காக,உழைத்திட,அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தந்திட உழைக்கும் அரசியல் களம் காணும் சொந்தங்களை ஏளனப்படுத்துகிறது,கேவலப்படுத்துகிறது.சில ,பல நாக்குகள்.அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு "அரசியல் ஒரு சாக்கடை"அதில் இறங்கக் கூடாது.நாமும் நாறிடுவோம் என்பது.

           ஓ!"சுத்தப்பத்தமானவர்களே!
கொஞ்சம் பொறுங்கள்.நீங்கள் சொல்லும்,அந்த அரசியல் சாக்கடையில் தான்,செந்தாமரையாய் மலர்ந்து மணம் வீசினார்கள் .கர்ம வீரர் காமராசர் அவர்களும்,கண்ணியமிகு காயித மில்லத் அவர்களும்.நாம் அவர்களது சாதனைகளை வாய்கிழிய பேசுகிறோம்.ஆனால் களமாட மட்டும் "சப்பைக் கட்டு" கட்டுகிறோம்.இது எப்படி இருக்கிறதென்றால் !?,மாம்பழச் சாறு குடிக்கும் நாம் அறிவாளிகளாகவும்,விதைத்து,பாதுகாத்து மாம்பழத்தை பறித்து ,விற்பவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது போன்றுள்ளது.

        நாட்டின் மேல் நேசம் கொண்டவர்களும்,மனித சமூகத்தின் மேல் அக்கறைக் கொண்டவர்களும்,எனக்கென்ன !?என ஒதுங்கியதால்தான் ,நம் தேசம் "கொள்ளையர்களாலும்",கொலைகாரர்களாலும்" மாறி மாறி ஆளப்படுகிறது .இப்படியே இது பழகிப் போனதால் ,அரசியலுக்கு வர வேண்டுமானால் ,கொள்ளை,கொலைச் செய்ய வேண்டும் என பாமரன் புத்தியில் பதிந்தும் விட்டது.ஆதலால் இன்றோ,அழகான நம் 
இந்தியத் தேசம் அலங்கோலமாகி விட்டது.மதயானைக் கூட்டம் புகுந்த சோளக்காடாய் ஆகி விட்டது.அரசியல் அதிகாரம் எனும் ஆயுதம் நல்லவர்கள் கையிலிருந்தால்,நாட்டைப் பாதுகாக்கும்,அதே அதிகாரம் அநியாயக்காரர்களின் கையிலிருந்தால்,நாட்டைச் சுடுகாடாய் மாற்றி விடும்.நம் நாட்டைப் பாதுகாக்க!நியாயவான்களே அரசியலையும் படிங்க!!

     

2 comments:

  1. நல்ல கருத்து
    உறைக்கும்படிச் சொல்லிப் போனவிதம் நன்று
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான கருத்து. பாராட்டுகள்.

    ReplyDelete