Wednesday 27 November 2013

சாலையோர....!!(சிறு கதை)

         "டேய்...!!இங்க பாரேன்..!-அழைத்தான் ஒருவன்.

         "என்னடா.!! இப்படி...!!அதிர்ந்தான் மற்றொருவன்.

        சாலையோரமாக போனவர்கள் எட்டி எட்டி பார்த்து விட்டு அதிசயப்பட்டார்கள்.
கை பேசியை கொண்டு படம்கூட பிடித்து கொண்டனர்.

            அப்படியென்ன!? இவர்கள்  பார்த்தார்கள்.ஒரு பள்ளத்தில் நாய்க்குட்டிகளுடன் தாய் நாய் படுத்து கிடந்தது.குட்டிகளெல்லாம் தாயிடம் பால் குடித்துகொண்டிருந்தது.அக்குட்டிகளுடன் ஒரு பூனை குட்டியும் இணைந்திருந்தது.தாய் நாயும் அக்குட்டியை விரட்டவில்லை.மற்ற குட்டிகளும் பூனைக்குட்டியை  விரட்டவில்லை.

              பசியின் வலியையும் கொடுமையையும் அந்நாய்கள் அறிந்திருந்தது.அதனால் அப்பூனையவும் அனுமதித்திருந்தது.

             சாலையின் ஒரு புறத்தில் இப்படியான காட்சி.மறு புறத்தில் என்ன சப்தம்..!? வாங்க பார்க்கலாம்.இல்லை வேண்டாம்.போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.இங்கிருந்தே பார்ப்போம்.  

            தாரை தப்பட்டைகள் நொறுங்குகிறது.விசில் சப்தம் காதை கிழிக்கிறது.குத்தாட்டம் இன்னும் கொலை வெறியாட்டம் என பல ஆட்டங்கள்.அந்த பெரிய கட்டிடத்திற்கு முன்னால்.

                ஒருவன் பின் ஒருவனாக கட்டியிருந்த சாரத்தை பிடித்து ஏறினார்கள்.கீழிருந்த கூட்டம் கூச்சலிட்டது.மேலிருந்தவர்கள்  பதிலுக்கு கூச்சலிட்டு கொண்டே பால் குடத்தை அந்த கட் அவுட் மேலூற்றினார்கள்.கூச்சலும் கும்மாளமும் மேலிட்டது.

        அங்கே ஒரு அவலம்.பக்கத்திலிருந்த போக்குவரத்து விளக்கு நிறுத்தத்தில் கையேந்தி கொண்டலைந்தது பலதரப்பட்ட வயிறுகள்........!!

           மிருகத்திடம் மனிதம் தெரிந்தது.மனிதர்களிடம் மிருகங்கள் தெரிகிறது.

2 comments: